லோக்சபா & சட்டசபைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா... மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த சிறப்புக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இன்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்த கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நாளை முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்த தொடர் நடைபெறும்.
இந்தச் சூழலில் இன்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு இந்தக் கூட்டம் கூடிய நிலையில், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை.
இதற்கிடையே மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதா நிறைவேறும்பட்சத்தில் இனி நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு கிடைக்கும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தரப்பட்டுள்ளது.. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் இது நாடாளுமன்றத்தில் தாக்கலாக உள்ளது. நடைபெறும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இது தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications