பரந்தூர் விமான நிலையம்- பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்: ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் விகே சிங்
டெல்லி: சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தடையில்லா சான்றிதழ் வழங்கிவிட்டதாக ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் விகே சிங் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையம் போலவே பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றிய 20 கிராமங்களில் சுமார் 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் சுற்று வட்டார மக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏகனாபுரத்தில் இந்தப் போராட்டம் நாள்தோறும் நடைபெறுகிறது. அதேபோல பரந்தூர் சுற்று வட்டார கிராம சபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதே நேரத்தில் பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்த ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. பரந்தூரை சுற்றிய 20 கிராமங்களில் 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ19.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ராஜ்யசபாவில் திமுக எம்பி கிரிராஜன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் விகே சிங், பரந்தூர் விமான நிலையத்துக்கு அக்டோபர் 25-ந் தேதியே பாதுகாப்புத் துறை அமைச்சகம் தடையில்லா சான்றிதழ் வழங்கிவிட்டது. இந்த தகவல் நவம்பர் 8-ந் தேதி தமிழ்நாடு அரசின் டிட்கோவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது என தெரிவித்திருக்கிறார். பரந்தூர் விமான நிலைய கட்டுமானப் பணிகள் ரூ20,000 கோடி மதிப்பீட்டில் அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் மத்திய இணை அமைச்சர் விகே சிங் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications