கடும் எதிர்ப்பு.. பின்வாங்கியதா மத்திய அரசு? சமூக ஊடக எதிர்காலத்தை தீர்மானிக்கும் PDP மசோதா வாபஸ்
டெல்லி: பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தனிநபர் தரவு பாதுகாப்பு (PDP) மசோதாவை திரும்பப்பெறுவதாக அறிவித்து இருக்கிறது மத்திய அரசு.
இணையதளங்கள், செயலிகள் போன்ற டிஜிட்டல் தளங்களில் தனிநபர்களின் தகவல்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறி மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு Personal Data Protection Bill எனப்படும் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை அறிமுகம் செய்தது.
இந்த மசோதாவில் இடம்பெற்ற விசயங்கள் தனிநபர் தகவல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எதிராகவும், கருத்து சுதந்திரத்துக்கு எதிராகவும் இருப்பதாக தொழில்நுட்ப வல்லுநர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடர்.. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்..!
தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா
ஆனால், மத்திய அரசோ இந்த மசோதா தனிநபர் பாதுகாப்பை உறுதிபடுத்தும் என்றே தெரிவித்து வந்தது. இந்த மசோதாவுக்கு பாஜக எம்பி பி.பி.சவுத்ரி தலைமையிலான 30 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு 4 மாதங்கள் பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு இந்த மசோதா தொடர்பாக இறுதி அறிக்கையை வெளியிட்டது.
மசோதா வாபஸ்
அந்த அறிக்கையை தொடர்ந்து கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி தனிநபர் பாதுகாப்பு மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு 8 மாதங்கள் கடந்தும் சட்டமாக்கப்படாமல் இருந்து வந்த இந்த மசோதாவை திரும்பப்பெறுவதாக மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்து இருக்கிறார்.
மத்திய அரசு விளக்கம்
இதுகுறித்து மத்திய அரசு தெரிவிக்கையில், "தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் 81 திருத்தங்கள் முன்மொழியப்பட்டன. டிஜிட்டல் தளத்தில் இதை செயல்படுத்துவது தொடர்பாக 12 பரிந்துரைகள் வழங்கப்பட்டன. நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கையை தொடர்ந்து, விரிவாக சட்ட கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.
Recommended Video
புதிய மசோதா
அதன் காரணமாக தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2019 ஐ திரும்பப் பெற்று, விரிவான சட்ட கட்டமைப்புக்கு ஏற்ப புதிய மசோதாவை கொண்டு வர முன்மொழியப்பட்டு இருக்கிறது." என்று குறிப்பிட்டது. மத்திய அரசின் இந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு 93 பரிந்துரைகள், 81 திருத்தங்களுடன் கூடிய 542 பக்க அறிக்கையை கடந்த ஆண்டு சமர்பித்தது குறிப்பிடத்தக்கது.