‛சஞ்சார் சாத்தி’ செயலி கட்டாயமில்லை.. எதிர்ப்புக்கு பணிந்த மத்திய அரசு.. பின்னணியில் ‛ஆப்பிள்’
டெல்லி: சைபர் மோசடியை தடுக்கும் வகையில் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்களில் ‛சஞ்சார் சாத்தி' செயலியை கட்டாயமாக இடம்பெற செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இன்று காலையில் லோக்சபாவில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அதில் இருந்து பின்வாங்கவில்லை. ஆனால் இன்று மதியம் திடீரென்று மத்திய அரசு பின்வாங்கி உள்ளது. இதன் பின்னணியில் ஆப்பிள், கூகுள் நிறுவனம் தெரிவித்த எதிர்ப்பு தான் முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.
‛சஞ்சார் சாத்தி' என்பது மத்திய அரசின் தொலை தொடர்பு துறையால் ‛சஞ்சார் சாத்தி' உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் பயன்படுத்த முடியும். கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யலாம்.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலமாக மக்கள் சைபர் பாதுகாப்பை பெற முடியும் என்று மத்திய அரசு கூறி வருகிறது. இதனால் தான் இந்த செயலியை Pre Installation முறையில் செல்போன், ஐபோன்களில் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆப்பிள் உள்பட பல நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தது. இது போதாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை சீண்டியது. இந்த செயலி மூலமாக பொதுமக்களை மத்திய அரசு உளவு பார்க்க திட்டமிடுவதாக குற்றம்சாட்டியது. இது விவாதத்தை கிளப்பியது.
இதையடுத்து இன்று காலையில் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா லோக்சபாவில் விளக்கம் அளித்தார். அப்போது, ‛‛சஞ்சார் சாத்தி செயலியால் யாரையும் உளவு பார்க்க முடியாது. செயலியை திறந்து சுயவிவரங்களை அளித்தால் மட்டுமே ஆக்டிவேட் ஆகும். அதனை பயன்படுத்தாமலும் இருக்கலாம். மக்கள் தேவை என்றால் செயலியை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த செயலி என்பது முழுக்க முழுக்க சைபர் மோசடி, டெலிகாம் சார்ந்த திருட்டில் இருந்து மக்களை பாதுகாப்பதை அடிப்படையாக கொண்டது. தொலைந்த செல்போனை மீட்க முடியும். இதனால் பொதுமக்கள் இந்த செயலியை பயன்படுத்த வேண்டும். மக்கள் இதனை ஆட்சேபிக்க கூடாது. மாறாக வரவேற்க வேண்டும். ஏனென்றால் இந்த செயலியின் நோக்கம் மக்களை சைபர் மோசடியில் இருப்பது பாதுகாப்பது தான்'' என்று கூறினார்.
இந்நிலையில் தான் செல்போன்களில் ‛சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம் எனும் உத்தரவை மத்திய அரசு இன்று திரும்ப பெற்றுள்ளது. இதன் பின்னணியில் ‛சஞ்சார் சாத்தி செயலி'யை மத்திய அரசு கட்டாயமாக்கியதை ஆப்பிள் உள்பட பல நிறுவனங்கள் ஏற்கவில்லை.மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அந்த நிறுவனங்கள் சவால் செய்ய திட்டமிட்டன. பொதுவாக கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்பட பிற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் குறிப்பிட்ட அரசு சார்ந்த செயலிகளை கட்டாயமாக Pre Installation முறையில் வழங்க மாட்டார்கள். ஏனென்றால் இது மக்களின் உரிமைக்கு எதிரானதாக அந்த நிறுவனங்கள் பார்க்கின்றன.
அதுமட்டுமின்றி 3 முக்கிய காரணங்கள் உள்ளன. அதாவது அரசு சார்ந்த செயலி என்பது தங்களின் நிறுவன ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் நிலைத்தன்மையை சவால் செய்யும் என்று நிறுவனங்கள் நினைக்கின்றன. இது முதல் காரணமாகும். அதேபோல் டெலிட் செய்ய முடியாத வகையில் செல்போனில் வழங்கப்படும் செயலயால் டிவைஸ் சார்ந்த சென்சிட்டிவான இன்பர்மேஷனை அக்சஸ் செய்ய முடியும். இது 2வது காரணமாகும்.
மேலும் ஒரு நிறுவனத்தின் செல்போன் என்பது பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படும். அப்படி இருக்கும்போது குறிப்பிட்ட அரசின் செயலியை Pre Installation முறையில் இடம்பெற செய்வது சரியானதாக இருக்காது என்று நிறுவனங்கள் நினைத்தன. இது 3வது காரணமாகும். இப்படியான சூழலில் தான் வேறு வழியின்றி மத்திய அரசு இந்த உத்தரவில் இருந்து பின்வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications