தமிழக ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ. 6,626 கோடி; மேற்கு வங்கத்துக்கு இரு மடங்கு அதிகம்!
டெல்லி: தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு தற்போதைய மத்திய பட்ஜெட்டில் ரூ. 6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன; 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இருப்பினும் எந்தெந்த ரயில் பாதை திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்கிற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1-ந் தேதி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டிலும் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் டெல்லியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான ரயில்வே திட்டங்களுக்காக பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அமைச்சர் அஸ்வினி விஷ்ணவ் விவரித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், மேற்கு வங்க ரயில்வே துறையை மிகப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய பிரதமர் மோடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். நடப்பாண்டில் மேற்கு வங்க மாநிலத்துக்கு ரூ. 13, 955 கோடி நிதி ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ரயில்வே துறை ரூ. 68,000 கோடி முதலீடு செய்திருக்கிறது.
இதனால் நிலம் கையகப்படுத்துதல், சட்டம்- ஒழுங்கை சீர்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் என்பது மிக முக்கியமானது. மேற்கு வங்க மாநிலத்தில் 101 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டுக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில் ரூ. 6, 626 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; தமிழ்நாட்டில் 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன; தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றார். ஆனால் எந்தெந்த ரயில் திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்கிற விவரங்களை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிடவில்லை. ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டை விட மேற்கு வங்க மாநிலத்துக்கு ரயில்வே திட்டங்களுக்கு மட்டும் இரு மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டுக்கு தற்போது கூடுதலாக சுமார் ரூ290 கோடி அளவில்தான் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications