முல்லைப் பெரியாறு- புதிய அணை கட்டும் திட்டம் இல்லை- கேரளாவுக்கு மத்திய அரசு பொளேர் பதில்!
டெல்லி: முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் திட்டம் எதுவும் இல்லை என்று லோக்சபாவில் கேரளா எம்பி டீன் குரியா கோஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ராஜ்பூஷன் சவுத்ரி திட்டவட்டமான பதிலைத் தெரிவித்தார். மேலும் முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் அணையின் நீர் மட்டத்தை தற்போதைக்கு 152 அடியாக உயர்த்த வாய்ப்பு இல்லை எனவும் அமைச்சர் ராஷ்பூஷன் சவுத்ரி கூறினார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொறியாயளர் பென்னி குக் சொந்த முயற்சியால் தமிழர்களின் பெரும் உயிர்த் தியாகத்தால் தமிழ்நாட்டு எல்லையில் கட்டப்பட்டதுதான் முல்லைப் பெரியாறு அணை. தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக பென்னி குக் இந்த முல்லைப் பெரியாறு அணையை கட்டினார்.

தமிழ்நாட்டுக்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு அணை கேரளா எல்லைப் பகுதியில் இருப்பதால் அணையின் செயல்பாட்டு நடவடிக்கைகளில் அம்மாநில அரசும் இணைந்து கொள்கிறது. தமிழ்நாட்டின் 5 தென் மாவட்டங்களுக்கு உயிர்நாடியாக திகழும் முல்லைப் பெரியாறு அணையை பல ஆண்டுகளாக கேரளா எதிர்த்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டதாக காலந்தோறும் பொய்யான தகவலைப் பரப்பிக் கொண்டே இருக்கிறது கேரளா. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து 136 அடியாகவும் குறைத்துவிட்டது கேரளா.
உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நடத்தப்பட்டன. தற்போதும் உச்சநீதிமன்ற்த்தில் முல்லைப் பெரியாறு அணை வழக்கு நிலுவையில் இருக்கிறது.
இந்த வழக்குகளில் ஒன்றில் 2014-ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக தமிழ்நாடு அரசு உயர்த்திக் கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. அதேநேரத்தில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை; ஆகையால் புதிய அணையை நாங்களே கட்டுவோம் என்கிற பல்லவியையும் கேரளா தொடர்ந்து பாடி வருகிறது.
இந்த பின்னணியில் லோக்சபாவில் நேற்று முல்லைப் பெரியாறு ஆற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரளா எம்பி டீன் குரியகோஸ் லோக்சபாவில் கேள்வி எழுப்பினார் .இதற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ராஜ்பூஷன் சவுத்ரி, முல்லைப் பெரியாறு அணை தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டுதான் வருகிறது. முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் திட்டம் எதுவுமே இல்லை என்றார்.
இதேபோல தேனி எம்பி தங்கதமிழ்ச் செல்வன், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் எப்போது 152 அடியாக உயர்த்தப்படும் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ராஜ்பூஷன் சவுத்ரி, அணையை பலப்படுத்தும் நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னரே 152 அடியாக நீர்மட்டம் உயர்த்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications