Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வக்பு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு-எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு- கூட்டு குழுவுக்கு அனுப்பிய மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நலன்களுக்கான வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்ததால் நாடாளுமன்ற கூட்டுக் குழுவு ஆய்வுக்கு அனுப்புவதாக லோக்சபாவில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ அறிவித்தார். லோக்சபாவில் இன்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே அனைத்து எதிர்க்கட்சிகளும் மிகக் கடுமையாக எதிர்த்தன. இதனையடுத்து வேறுவழியே இல்லாமல் வக்பு சட்ட திருத்த மசோதா தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்களின் பெயரில் இஸ்லாமியர்கள் தானமாக நிலம் வழங்கி இருக்கின்றனர். இந்த நிலம்தான் வக்பு வாரிய சொத்துகள் எனப்படுகின்றன. இதற்காக 1954-ல் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. 1958-ம் ஆண்டு அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்களும் அமைக்கப்பட்டன.

lok sabha

வக்பு வாரிய சட்ட திருத்தம்: வக்பு வாரியங்களானவை, மசூதிகள்- மத்ரஸாக்கள், தர்காக்களை நிர்வகிக்கும் நிர்வாக முறைகளைக் கண்காணிக்கும்; இந்த வழிபாட்டு தலங்களின் பெயரால் உள்ள வக்பு சொத்துகளைக் கண்காணிக்கும். வக்பு வாரிய சொத்துகள் தொடர்பான விரிவான சட்டம ்1995-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திலும் 2013-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திருத்தம் கொண்டு வந்தது. இதனடிப்படையில்தான் வக்பு வாரியம் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வக்பு வாரியம்: தமிழ்நாட்டில் சுமார் 70,000 வக்பு வாரிய சொத்துகள் உள்ளன. அதாவது 2 லட்சம் ஏக்கர் அளவுக்கு வக்பு வாரிய சொத்துகள் இருக்கின்றன. மசூதிகள் உள்ளிட்ட 7 ஆயிரத்துக்கும் அதிகமான வக்பு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இவற்றை தமிழ்நாடு வக்பு வாரியம் கண்காணித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் இதே முறையில்தான் வக்பு வாரியம் செயல்பட்டு வருகிறது.

திருத்தங்கள்: தற்போது 1995-ம் ஆண்டு வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வருகிறது. குறிப்பாக வக்பு வாரியம் உரிமை கோரும் சொத்துகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்படும்; வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தவரும் உறுப்பினராக இடம் பெறுதல்; வக்பு வாரியத்தில் கணிசமான அளவு முஸ்லிம் பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்குதல் உள்ளிட்ட திருத்தங்கள் இடம் பெற உள்ளனவாம்.

தமிழ்நாடு வக்பு வாரியம் எதிர்ப்பு: மத்திய அரசின் இந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் வெளியிட்டிருந்த அறிக்கையில், வக்பு சட்டம் 1995இல் 40 திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும், அதுவும் வக்பு சொத்துகளை பாதுகாப்பது, பராமரிப்பது தொடர்பில்தான் அந்தத் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது மிகவும் வருத்தத்திற்குரியது. அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி, சட்டத்தின் துணையோடு வக்பு சொத்துகளை வளைத்துக் கொள்வதற்கு யார் முனைந்தாலும் அந்த சட்டத் திருத்தத்தை மிகக் கடுமையாக எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

தோற்கடிக்க வேண்டும்: வக்பு சட்டங்களை பலவீனப்படுத்த பா.ஜ.க. முயற்சித்தால் நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அந்த முயற்சியைத் தோற்கடிக்கக்கூடிய வகையிலான வேலைகளை - நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு கட்சிகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படாமல் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்று சேர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என தெரிவித்திருந்தார். மேலும் இது மத சுதந்திரத்துக்கு எதிரான மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

லோக்சபாவில் தாக்கல் - வெளிநடப்பு: இந்த நிலையில் லோக்சபாவில் இன்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார். இதனையடுத்து மசோதா மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, இடதுசாரிகள், மஜ்லிஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் மசோதாவை கடுமையாக எதிர்த்தன. இதன் பின்னர் மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ விளக்கம் அளித்தார். ஆனால் அவர் விளக்கம் அளிக்கும் போதே அதனை நிராகரித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைப்பு: வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறுவழியில்லாமல் இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. லோக்சபாவில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ இதனை அறிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+