ஷேக் ஹசீனாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் ஏன்? ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
டெல்லி: வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன; இதனால் இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டும் என ஷேக் ஹசீனா வேண்டுகோள் விடுத்தார்; இதனடிப்படையில் இந்தியாவுக்குள் ஷேக் ஹசீனாவுக்கு தற்காலிகமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். வங்கதேசத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்; அங்கு விரைவில் இயல்பு நிலைமை திரும்பும் என்றும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் வங்கதேச நிலவரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று அளித்த விளக்கம்: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டன.

வங்கதேசத்தில் ஆகஸ்ட் 5-ந் தேதி ஊரடங்கை மீறி போராட்டங்கள் நடத்தப்பட்டன. ராணுவம் உள்ளிட பல்வேறு தரப்புடன் ஆலோசனை நடத்திய பின்னர் பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலக முடிவு செய்தார். அப்போது இந்தியாவுக்குள் தம்மை அனுமதிக்க வேண்டும் என மிக குறுகிய கால இடைவெளியில் ஷேக் ஹசீனா கோரிக்கை வைத்தார். இதனையடுத்து தற்காலிக அடிப்படையில் ஷேக் ஹசீனா இந்தியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லிக்கு நேற்று மாலை ஷேக் ஹசீனா வந்தடைந்தார்.
வங்கதேசத்தில் நமது தூதரகத்தின் மூலமாக இந்திய சமூகத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். வங்கதேச நிலைமைகளை உன்னிப்பாக கவனித்தும் வருகிறோம். வங்கதேச நாட்டில் 9,000 மாணவர்கள் உட்பட 19,000 இந்தியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் கடந்த ஜூலை மாதம் நாடு திரும்பிவிட்டனர். வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களின் நிலைமை தொடர்பாகவும் கண்காணித்தும் வருகிறோம். சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கவலை கொள்கிறோம். வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை இயல்புக்கு வரும் என
நம்புகிறோம். எல்லைகளில் நமது பாதுகாப்புப் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். டாக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது மத்திய அரசு. இவ்வாறு மத்திய அமைச்ச ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications