சபாநாயகர் தேர்தல் போட்டி வேண்டாமே..."இந்தியா" கூட்டணியிடம் கடைசி நிமிடம் வரை மன்றாடிய பாஜக கூட்டணி!
டெல்லி: லோக்சபா சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தாமல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கும் முயற்சிகளை தற்போது வரை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ தெரிவித்தார். சபாநாயகரை ஒருமனதாக தேர்ந்தெடுப்பது தொடர்பாக தற்போதும் இந்தியா கூட்டணி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.. எப்படியும் சபாநாயகர் ஒருமனதாகவே தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் அமைச்சர் கிரண் ரிஜுஜூ கூறினார். ஆனால் இந்த முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டதை குறிப்பிடும் வகையில் சபாநாயகர் தேர்தல் நடக்கட்டும்.. முடிவுகள் வரட்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
18-வது லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக ஓம் பிர்லா, இந்தியா கூட்டணி வேட்பாளராக கே.சுரேஷ் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக லோக்சபா சபாநாயகரை ஒருமனதாக தேர்ந்தெடுக்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. இந்தியா கூட்டணிக்கு துணை சபாநாயகர் பதவியைத் தர வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக கூட்டணி அரசு நிராகரித்தது. இதனால் இந்தியா கூட்டணியும் சபாநாயகர் தேர்தலில் களமிறங்கியது.
அதேநேரத்தில் இன்று காலை வரை இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் மத்திய அரசு தரப்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சபாநாயகர் தேர்தல் போட்டியில் இருந்து விலக வேண்டும் என இந்தியா கூட்டணியிடம் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ உறுதி செய்திருக்கிறார்.
இது தொடர்பாக கிரண் ரிஜுஜூ கூறுகையில், எப்படியும் போட்டி இல்லாமல் சபாநாயகரை தேர்ந்தெடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் கூறியிருந்தார்.
ஆனால் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கோ, சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. முடிவுகள் வரட்டுமே.. காத்திருப்போம் என்றார். அதாவது இந்தியா கூட்டணியை சமாதானப்படுத்தும் மத்திய பாஜக அரசின் முயற்சிகள் தோற்றுவிட்டன என்பதையே ராஜ்நாத் சிங் மறைமுகமாக தெரிவித்துள்ளதாகவும் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications