டெல்லியிலேயே முகாமிட்டிருக்கும் முக்கிய 'தலை' .. மத்திய அமைச்சர் வாய்ப்பு.. தமிழகத்தில் யாருக்கு?
டெல்லி: மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகலாம் என்கிற நிலை உள்ளது. தமிழக பாஜகவினரும் அமைச்சர்களுக்கான ரேஸில் உள்ளனர். குறிப்பாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த ரேஸில் அதிகம் இருக்கிறார். எப்படியும் பொறுப்பு வாங்கிவிட வேண்டும் என டெல்லியிலேயே அவர் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை பாஜக நிர்வாகிகளுடன் இறுதிகட்ட ஆலோசனை நடத்த போகிறார்.
பாஜக மூத்த தலைவர்கள் பலரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட தலைவர்கள் டெல்லிக்கு சென்றுள்ளனர். இதனால் எந்தநேரமும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.
தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் எந்தெந்த மாநிலங்களில் இருந்து மத்திய அமைச்சர் தேர்வு செய்யப்படவில்லையோ, அந்த மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அந்த மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

எத்தனை பதவிகள்
மத்திய அமைச்சரவையில் பிரதமர் மோடியைத் தவிர்த்து 21 கேபினட் அமைச்சர்களும், 9 இணை அமைச்சர்களும் (தனிப் பொறுப்பு), 23 இணை அமைச்சர்களும் உள்ளனர். 28காலி இடங்கள் இருக்கிறதாம். இந்த பொறுப்புகளுக்கு அமைச்சர்கள் ஆகிவிட வேண்டும் பல்வேறு பாஜக தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

முகாம்
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர்களில் யாருமே எம்பிக்கள் ஆகாத நிலையில், அமைச்சராகும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்ற பரபரப்பு நிலவுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சருக்கான ரேஸில் முன்னிலையில் உள்ளார். அவர் குமரி தொகுதியில் தோற்ற போதிலும், எப்படியும் பொறுப்பு வாங்கிவிட வேண்டும் என்று டெல்லியிலேயே முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்பார்ப்பு
பாஜக மாநில தலைவர் எல் முருகனுக்கு அமைச்சராகும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. பாஜக மாநில தலைவராக எல்முருகன் பதவியேற்ற பின்னர் பாஜக தமிழகத்தில் 4 சட்டமன்ற இடங்களில் வென்றுள்ளது. புதுச்சேரியில் கூட்டணி அரசை பாஜக அமைத்துள்ளது. எனவே எல் முருகனின் திறமைக்கு பரிசாக அமைச்சர் பதவி அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

நிர்மலா சீதாராமன்
தற்போதைய நிலையில் எம்பிக்கள் அல்லாதோர் அமைச்சர்கள் ஆனால் ராஜ்யசபா எம்பியாக ஆறு மாதத்தில் தேர்வாக வேண்டும். அதற்கான வாய்ப்புகளையும் பாஜக மேலிடம் யோசித்தே அமைச்சர் பதவியை அளிக்கும் என்று சொல்கிறார்கள். இப்போது தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராகவும், ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் உள்ளனர். இரண்டு பொறுப்புமே பிரதமர், உள்துறை, பாதுகாப்பு வரிசையில் உள்ள அடுத்தடுத்த நிலையில் உள்ள முக்கியமான பொறுப்புகள் ஆகும். நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்தும், ஜெய்சங்கர் குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வானார்கள்.

மத்திய அமைச்சர்
தமிழக பாஜகவினரோ அல்லது தமிழகத்தில் உள்ள அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரோ யாருமே இந்த முறை அமைச்சர் ஆகவில்லை. ஓ பன்னீர்செல்வம் மகன் ஓபி ரவீந்திரநாத், ஜி.கே.வாசன். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி என அமைச்சர் ரேஸ் பட்டியல் உள்ளது. ஆனால் யாருக்காவது இந்த முறை தமிழகத்தில் அமைச்சராகவும் வாய்ப்பு உள்ளதா என்று டெல்லி வட்டாரத்தில் கேட்டால், சொல்ல முடியாது, என்னவேண்டுமானாலும் நடக்கலாம். அமைச்சரவை விரிவாக்கம் என்பது படு ரகசியமாக நடத்தப்படுகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஒன்றிரண்டு பேரை தவிர யாருக்கும் தெரியாது என்கிறார்கள். முடிவு செய்து அறிவிப்பு வெளியாகப்போகும் கடைசி நிமிடங்களிலேயே யாருக்கு அமைச்சர் வாய்ப்பு என்பது தெரியும் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்!












Click it and Unblock the Notifications