மத்திய அமைச்சரவை மாற்றம்.. தோமர் உள்ளிட்டோர் ராஜினாமாவால் 4 இணை அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புகள்!
டெல்லி: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது. மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை 4ஆம் தேதி நடைபெற்றது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதே போல், மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், ஸோரம் மக்கள் இயக்கம் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த தேர்தல்களில் மத்திய அமைச்சர்களாக இருந்த சிலரும், எம்.பி.க்கள் சிலரும் போட்டியிட்டனர். அதில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல் உட்பட 10 எம்.பி.க்கள் சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளனர். நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரகலாத்சிங் பட்டேல் ஆகியோர் மத்திய பிரதேச சட்டசபைக்கு எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ரேணுகா சிங், சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் பட்டேல், ரேணுகா சிங் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வந்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதே போல், மத்திய பிரதேச எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகேஷ் சிங், உத்ய பிரதாப் சிங் மற்றும் ரித்தி பதக் ஆகியோரும் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.
பா.ஜ.க மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மத்திய அமைச்சர்களின் ராஜினாமாவை இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து, 3 அமைச்சர்கள் வகித்து வந்த இலாகாக்கள், இணை அமைச்சர்கள் சிலருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
3 மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், அவர்கள் கவனித்து வந்த துறைகள் நான்கு மத்திய அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புகளாக வழங்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, தற்போதுள்ள இலாகாவைத் தவிர, உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் பொறுப்பேற்கிறார்.
மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஏற்கனவே கவனித்து வரும் இலாகாக்களுடன் கூடுதலாக ஜல் சக்தி அமைச்சகத்தின் இணை அமைச்சராக செயல்பட உள்ளார். இணை அமைச்சரான டாக்டர். பார்தி பிரவின் பவார், பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் பொறுப்பையும் சேர்ந்து கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கு வேளாண் துறையும் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.
3 மத்திய அமைச்சர்கள் கவனித்து வந்த இலாகாக்கள் பிறருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டடுள்ள நிலையில், நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் பட்டேல் ஆகியோர் மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, ரேணுகா சிங், சத்தீஸ்கர் மாநில அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் எனத் தெரிகிறது. எம்.பி பதவிகளை ராஜினாமா செய்த தலைவர்களும், அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications