வரும் அக்டோபர் 15 முதல் பள்ளிகள் திறப்பு...வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
டெல்லி: பள்ளிகளை வரும் அக்டோபர் 15ஆம் தேதி திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தாலும் சில வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும், மாணவர்களை பள்ளிக்கு வருமாறு கட்டாயபடுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக வரும் 31ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், UNLOCK 5.0 இன் கீழ், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, பள்ளி, பயிற்சி நிறுவனங்களை அக்டோபர் 15ஆம் தேதிக்கு மேல் பகுதி வாரியாக திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவல்கள் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வட்டிக்கு வட்டி.. காமத் குழு பரிந்துரை என்னாச்சு? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
- பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் முழுமையாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- பள்ளிகள் அவசர சிகிச்சை, பொது ஆதரவு குழு, சுகாதார ஆய்வுக் குழு போன்ற பணிக்குழுக்களை உருவாக்க வேண்டும்.
- சமூக இடைவெளி, தனி மனித இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதற்கான நெறிமுறைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வகுத்துக் கொள்ளலாம்.
- இருக்கை திட்டத்தைத் திட்டமிடும்போதும், நுழைவு மற்றும் வெளியேறும் நேரங்களின் போதும் தனிமனித இடைவெளியை பின்பற்ற உறுதி செய்ய வேண்டும். நிகழ்வுகள் நடத்தக் கூடாது.
- அனைத்து மாணவர்களும் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும். முக்கயமாக பள்ளிகளில் சந்திப்பு நடக்கும்போது, நூலகத்தில் சந்தித்துக் கொள்ளும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்
- மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்பு பெற்றோரின் ஒப்புதலைப் பெற வேண்டும். வீட்டில் இருந்தே படிக்க மாணவர்கள் விருப்பப்பட்டால், அதற்கு பெற்றோரின் அனுமதியைப் பெற்று அதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
- கொரோனாவால் சமூகம் எதிர்கொண்டு இருக்கும் பிரச்சனைகள் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், கம்யூனிட்டி உறுப்பினர்கள் ஆகியோருக்கு எடுத்துரைக்க வேண்டும்.
- பள்ளி காலாண்டர் மாற்றம், குறிப்பாக தேர்வு அமரரும் விடுமுறை குறித்த அறிவிப்புகளை கட்டாயம் மாற்றி அமைத்து மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பு அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- முழுநேர பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர், மருத்துவர், செவிலியர், கவுன்சிலர்கள் பள்ளியில் அமர்த்த வேண்டும். தினமும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
- மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களின் ஆரோக்கியம் குறித்த தகவல்களை முன்கூட்டியே பெற்றுக் கொள்ள வேண்டும். இத்துடன் அருகில் இருக்கும் கொரோனா மையங்கள், மருத்துவமனைகள், அவசர சிகிச்சை ஊர்திகள் ஆகியவற்றை அறிந்து வைத்து இருக்க வேண்டும்.
- மாணவர்களுக்கு ஏற்ற வகையில் உடல்நலம் பாதிக்கப்படும் நிலையில் விடுமுறை வழங்க வேண்டும். வீட்டில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்.
- மதிய உணவு வழங்கும் நடவடிக்கையில் முன்னெச்சரிக்கை தேவை.
- பள்ளிகளை அக்டோபர் 15ஆம் தேதி திறக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. ஆன்லைன் வகுப்புகளை ஊக்குவிக்க வேண்டும் போன்ற நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.