யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு.. மொத்தம் 1016 பேர் தேர்ச்சி! தமிழகத்தில் யார் முதலிடம்!
டெல்லி: கடந்த 2023இல் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா என்ற மாணவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
மத்திய அரசில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளில் பணியாற்றும் நபர்களைத் தேர்வு செய்ய மத்திய பணியாளர் ஆணையம் யுபிஎஸ்சி தேர்வுகளை நடத்தும்.

யுபிஎஸ்சி: அதன்படி கடந்தாண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் பணிகளுக்கான தேர்வுகள் நடைபெற்றது. க்ரூப் ஏ மற்றும் க்ரூப் பி பணியிடங்களுக்கான தேர்வை யுபிஎஸ்சி நிர்வாகம் நடத்தியது. இதில் குடிமைப் பணிகளுக்கு மொத்தம் மூன்று வகையான தேர்வுகள் நடத்தப்படும். அதில் தேர்வானவர்களுக்கு மார்க் அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படும்.
கடந்த மே 28ஆம் தேதி முதல்நிலை தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்குக் கடந்தாண்டு செப் 15 தொடங்கி 5 நாட்கள் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து அதில் தேர்வானவர்களுக்குக் கடந்த ஜனவரி 4 முதல் 9 வரை நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த யுபிஎஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் தான் இப்போது வெளியாகி இருக்கிறது. இதில் மொத்தம் 1016 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகள் வெளியீடு: அவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், இந்திய வெளியுறவுப் பணி, மத்தியப் பணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகிய பணிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தேர்வானவர்களில் மொத்தம் 347 பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த லிஸ்டில் 116 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில், ஒபிசி பிரிவில் இருந்து 303 பேரும், எஸ்சி பிரிவில் இருந்து 165 பேரும், எஸ்டி பிரிவில் இருந்து 86 தேர்வாகியுள்ளனர்.
முதலிடம் யாருக்கு: இதில் ஆதித்ய ஸ்ரீவஸ்தவா என்பவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். அனிமேஷ் பிரதான் 2ஆவது இடத்தை பிடித்துள்ள நிலையில், டோனூரு அனன்யா ரெட்டி 3ஆவது இடத்தையும் பி கே சித்தார்த் ராம்குமார் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளார். மேலும் ருஹானி என்பவர் 5ஆவது இடத்தை பிடித்துள்ளார். இது தவிரச் சிருஷ்டி தபஸ், அன்மோல் ரத்தோர், ஆஷிஷ் குமார், நௌஷீன், ஐஸ்வர்யம் பிரஜாபதி ஆகியோர் 6 முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.
முன்பே குறிப்பிட்டது போலவே 2023 தேர்வில் மொத்தம் 1016 பேர் தேர்வாகி இருக்கிறார்கள். அவர்களில் 664 பேர் ஆண்கள் மற்றும் 352 பெண்கள் ஆவர்.
தமிழக மாணவர்: இதில் தமிழ்நாட்டில் இருந்த பிரசாந்த் என்ற மாணவர் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் தேசிய ரேங்கிங்கில் 78ஆவது இடத்தை பிடித்துள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவரான பிரசாந்த், கடந்த 2022ஆம் ஆண்டில் இளங்கலை மருத்துவ படிப்பை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.
ரிசல்ட் செக் செய்வது எப்படி: முதலில் நீங்கள் யுபிஎஸ்சி-இன் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே இருக்கும் சிவில் சர்வீஸ் தேர்வு 2023 இறுதி முடிவுகள் என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். அதை க்ளிக் செய்தாலே போதும் இறுதி முடிவுகள் வரும். அதில் உங்கள் பெயர் இடம் பெற்று இருக்கிறதா என்று செக் செய்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் அந்த pdfஐ டவுன்லோட் செய்தும் வைத்துக்கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications