அவசரமாக உதவி கேட்ட இந்தியா.. ''எங்கள் மக்கள்தான் முக்கியம்''.. கைவிரித்த அமெரிக்கா..நடந்தது என்ன?
டெல்லி: கொரோனா தடுப்பூசி தொடர்பாக இந்தியா கேட்டுக் கொண்ட உதவியை செய்ய முடியாது என்று அமெரிக்கா கைவிரித்துள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் பரிதாபப்படும் அளவுக்கு இன்று இந்தியாவின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா முதல் அலையில் அண்டை நாடுகள் மற்றும் விரும்பிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள், மருந்துகளை டன் கணக்கில் கொடுத்து ஆபத்து காலத்தில் உதவி புரிந்த நமது நாடு, தற்போது மற்ற நாடுகளின் உதவியை எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருக்கிறது.

பரிதாப இந்தியா
கடந்த வருடம் கொரோனா என்னும் கொடிய அரக்கனுடன் போரிட்டு ஓரளவு வெற்றியை வசமாக்கிய இந்தியா, இந்த முறை கொரோனாவுக்கு முழுமையாக அடிபணிந்து விட்டது என்றே கூறலாம். நாளுக்கு நாள் காண்பவர்களை எல்லாம் கொரோனா பேய் ஒட்டிக் கொள்வதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. கூட்டம், கூட்டமாக வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகள் இல்லாமல் மருத்துமனைகள் தள்ளாடி வருகின்றன.

கொரோனா பறிக்கும் உயிர்கள்
ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெரும் நோயாளிகளின் உயிரை காப்பாற்றவே பெரும்பாடு பட வேண்டியதிருக்கிறது. மகாராஷ்டிரா, டெல்லியில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் உயிரிழப்பது வழக்கமாகி விட்டது. மத்திய அரசும் விமானப்படை விமானம், ரயில் மூலம் ஆக்சிஜன் கொண்டு வந்து நிலைமையை சமாளிக்க முயற்சி எடுத்து வருகிறது. ஆனாலும் மோசமான நிலையில் இருந்து மீள முடியவில்லை.

கைவிரித்த அமெரிக்கா
நமது பரிதாப நிலையை பார்த்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் உதவி புரிவதாக கூறியுள்ளது சற்று ஆறுதலாக அமைந்துள்ளது. ஆனால் நீண்ட கால நண்பனும், உலக நாடுகளின் பெரியண்ணனுமான அமெரிக்கா இந்தியாவுக்கு உதவி புரிய முடியாது என கைவிரித்துள்ளது.

தடையை நீக்க முடியாது
அமெரிக்காவில் கொரோனா தொற்று ஆட்டிப்படைத்து வந்ததால் உள்நாட்டின் தேவை கருதி அந்த நாடு தடுப்பூசி தயாரிக்க பயன்படும் மூல பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்து இருக்கிறது. தற்போது கோர நிலையில் உள்ள இத்தியா, தடுப்பூசி தயாரிக்க பயன்படும் மூல பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கும்படி அமெரிக்காவை கேட்டுக் கொண்டது. ஆனால் ஏற்றுமதி தடையை நீக்க முடியாது என்று அதிரடியாக அறிவித்துள்ளது அமெரிக்கா.

எங்கள் மக்கள் முக்கியம்
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது:- உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக பாதிப்புகள் உள்ளன. மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். எங்கள் மக்கள் முக்கியம். மக்களை காப்பாற்றும் கடமை எங்களுக்கு உள்ளது. அமெரிக்கர்கள் தடுப்பூசி போட்டு கொண்டால், அது அவர்களுக்கு மட்டுமல்ல மற்ற நாட்டினருக்கு நலம் பயக்கும்.

முடிந்த உதவி செய்வோம்
உள்நாட்டில் தடுப்பூசியின் தேவை கருதி தடுப்பூசி தயாரிக்க பயன்படும் மூல பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலக நாடுகளுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்வோம்' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications