இந்திய பெட்ரோலிய நிறுவனம் மீது.. பொருளாதார தடை! அடங்காமல் ஆடும் டிரம்ப்!
டெல்லி: இந்தியா மீது அமெரிக்கா விதித்திருக்கும் வரி, கடுமையான வர்த்தக பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி எனது நெருங்கிய நண்பர் என்று சொல்லிக்கொண்டு, மறுபுறம் இந்தியாவுக்கு அதிக வரியை விதித்திருப்பது நியாயமா? என்று டிரம்புக்கு பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படி இருக்கையில் இந்திய நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்திருக்கிறது.
'TR6 பெட்ரோ இந்தியா LLP' என்கிற நிறுவனம், ஈரானுடன் வணிகத்தில் ஈடுபட்டதால் இந்த தடை விதிக்கப்படுவதாக அமெரிக்கா கூறியிருக்கிறது. ஏற்கெனவே விதித்த வரியை குறைக்க நாம் போராடி வரும் நிலையில், இந்த புதிய தடை தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

என்ன நடந்தது?
TR6 பெட்ரோ இந்தியா LLP என்பது பெட்ரோல் விற்பனை செய்யும் நிறுவனம் கிடையாது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் போல, வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நிறுவனம் இல்லை. TR6 பெட்ரோ இந்தியா LLP நிறுவனம், தார் இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெய்யிலிருந்துதான் தார் பெறப்படுகிறது என்பதால் இந்நிறுவனம், பெட்ரோ இந்தியா என்கிற பெயரில் இயங்கி வருகிறது. தார் இறக்குமதியும் பெரிய அளவுக்கு கிடையாது. மற்ற நிறுவனங்களை காட்டிலும் குறைவான அளவே இறக்குமதி செய்கிறது.
தடை ஏன்?
இப்படி எந்த விதத்திலும் முக்கியத்துவம் இல்லாத இந்த நிறுவனத்தின் மீது தடை ஏன்? என்று கேள்வி எழலாம். இதற்கு அமெரிக்கா பதிலளித்திருக்கிறது. அதாவது ஈரானுடன் யாரும் அன்னம் தண்ணி பழக கூடாது என நாங்கள் சொல்லியிருக்கிறோம். இருப்பினும், இந்நிறுவனம் தெரிந்தே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்த ஆண்டு ஜூலை வரை சுமார் $8 மில்லியனுக்கும் அதிகமான அளவில் ஈரானிய தார் இறக்குமதியை செய்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது. ஈரானுடன் வர்த்தகம் என்பது, அந்நாட்டின் அணு சக்தி திட்டத்திற்கு செய்யப்படும் மறைமுக உதவி என்பதுதான் அமெரிக்காவின் வாதம்.
புலம்பும் அமெரிக்கா
"ஈரானுடனான இத்தகைய வர்த்தகம் அதன் அணுசக்தி திறனை அதிகரிக்க நிதி உதவி செய்கிறது. மட்டுமல்லாது பயங்கரவாத குழுக்களுக்கு பலம் கொடுக்கிறது. இது சர்வதேச கடல் வழி வர்த்தகத்தை, கடல் வழி போக்குவரத்தை பாதிக்கும்" என்று அமெரிக்கா கூறி வருகிறது. எனவே ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகத்தான் தற்போது இந்திய நிறுவனத்தின் மீதும் பொருளாதார தடையை விதித்திருக்கிறது.
பாதிப்பை ஏற்படுத்தாத தடை
இந்த தடை நமக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் தடை விதிப்புக்கு உள்ளான 'TR6 பெட்ரோ இந்தியா LLP' நிறுவனத்துடன் வர்த்தகத்தில் உள்ள மற்ற இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்பட, கண்காணிப்புக்கு உள்ளாக வாய்ப்புகள் உள்ளன. அதேபோல இந்நிறுவனத்திற்கு கடன் வழங்கியிருக்கும் வங்கிகளும் அலர்ட் செய்யப்படும். தடை விதிக்கப்பட்ட நிறுவனத்துடன் சர்வதேச நிறுவனங்கள் வர்த்தகம் செய்ய தயங்கும்.
இந்தியாவை சேர்ந்த நிறுவனத்திற்கு மட்டும் தடை விதிக்கப்படவில்லை. மாறாக சர்வதேச அளவில் 41 நிறுவனங்கள், தனிநபர்கள், கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே வரி விவகாரத்தில் நாம் அதிருப்தியில் இருக்கிறோம். இப்போது இந்திய நிறுவனத்தின் மீது தடை விதித்திருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications