எரிபொருள் நெருக்கடி.. பொதுப்போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்துங்க.. பிரதமர் மோடி அறிவுரை
செகந்திராபாத்: மேற்காசிய போரால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எண்ணெய் பயன்பட்டை குறைத்து இறக்குமதி செலவை கட்டுப்படுத்த சில புதிய யோசனைகளையும் அறிவுரைகளையும் பிரதமர் மோடி முன்வைத்துள்ளார். அதாவது, மக்கள் பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும், காரில் செல்ல வேண்டியிருந்தால் கார் பூலிங் (Car poolin) முறையை பயன்படுத்தி பயணிக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க பல்வேறு புதிய முயற்சிகளை கையாள வேண்டும் என்று பேசியுள்ளார். குறிப்பாக பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் பயன்பாட்டை குறைக்க மக்கள் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

பிரதமர் மோடி கூறியதாவது:- உலகளவில் எரிசக்தி விலை உயர்வு மற்றும் விநியோக சங்கிலி பாதிப்புகள் காரணமாக சில நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். எரிபொருள் விநியோக சங்கிலி தொடர்ந்து நெருக்கடியில் இருக்கும் போது நாம் எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தாலும் சிரமங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
எனவே, இப்போது நாட்டையும் தாய்நாட்டையும் முதன்மையாக வைத்து நாம் ஒற்றுமையாக போராட வேண்டும். தேசப்பற்று என்பது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்வது மட்டும் அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டிற்காக வாழ்வதும், நாட்டிற்கான கடமைகளை நிறைவேற்றுவதும் தேசப்பற்றே
எரிபொருள் பயன்பாட்டில் உடனடி கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் . இறக்குமதி செய்யப்படும் எரிசக்தி மீதான சார்பை குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. உலகளாவிய நெருக்கடியான இந்த காலத்தில், கடமையை முதன்மையாகக் கொண்டு நாம் ஒரு உறுதியை ஏற்க வேண்டும். அதை முழுமையான அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும்.
பெட்ரோல் மற்றும் டீசலை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதே முக்கிய உறுதிமொழியாக இருக்க வேண்டும். அவற்றின் பயன்பாட்டை நாம் கட்டுப்படுத்த வேண்டும். எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும். மெட்ரோ வசதி உள்ள நகரங்களில் மக்கள் எரிபொருள் சிக்கனமான போக்குவரத்து முறைகளை தேர்வு செய்ய வேண்டும்.
மெட்ரோ ரயில் வசதி உள்ள நகரங்களில், நாம் மெட்ரோவிலேயே பயணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்க வேண்டும் தனியார் வாகனங்களை பயன்படுத்த வேண்டிய சூழலில், கார்பூலிங் முறையை கடைப்பிடிக்க வேண்டும். ஒரே வாகனத்தில் பலர் சேர்ந்து பயணம் செய்வது எரிபொருள் தேவையைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்."காரை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், கார்பூலிங் முறையை பின்பற்ற முயற்சிக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications