இந்திய பள்ளிகளில் வேதக்கல்வி.. சமஸ்கிருத பாடம்! சிபிஎஸ்இ போல் தனி வாரியங்கள் அமைக்கும் மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் வேதக்கல்விக்கு என்று தனியாக வாரியம் ஒன்றை அமைக்க இருப்பதாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் அறிவித்து இருக்கிறார்.
இந்தியாவில் பள்ளி படிப்புகளுக்கு இன்று மத்திய அரசு சார்பிலும் மாநில அரசுகளாலும் பல்வேறு வாரியங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மத்திய அரசால் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆகிய வாரியங்களின் கீழ் பள்ளிகள் வகுப்புகள் எடுக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாநிலங்களில் ஸ்டேட் போர்ட் பாடத்திட்டம் அமலில் உள்ளது.

கல்வி வாரியங்கள்
தமிழ்நாட்டில் மெட்ரிகுலேசன், ஸ்டேட் போர்ட் என்று 2 கல்வி வாரியங்கள் செயல்பட்டு வந்த நிலையில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. அனைத்து வகை மாணவர்களும் ஒரே வகையிலான பாடங்களை படிப்பதற்கு இது வாய்ப்பாக அமைந்தது.

வேதக்கல்வி
இந்த சூழலில்தான் மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்து மாநிலங்களில் அமல்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. இதற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு உள்ளது. இதற்கிடையே இந்தியாவின் வேதக்கல்வியை அரசே நடத்தும் வகையில் தனியாக கல்வி வாரியம் ஒன்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

சமஸ்கிருத ஷிக்சா வாரியம்
இதுகுறித்து லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார், வேதக்கல்விக்கு என்று பிரத்யேகமாக மகரிஷி சாந்திபனி ராஷ்ட்ரிய வேஹ்ட சமஸ்கிருத சிக்ஷா வாரியம் (MSRVSSB) மற்றும் பாரதிய சிக்ஷா வாரியம் (BSB) அகியவை அமைக்கப்படும் என்று கூறி இருக்கிறார்.

வேதம் கலந்த நவீனம்
இந்தியாவில் வேதக்கல்வி முறையை வளர்ப்பதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சி அமைப்புகளில் ஒன்றான உஜ்ஜெய்னை சேர்ந்த மகரிஷி சாந்திபனி ராஷ்ட்ருட வேத வித்யா பிரதிஷ்தான் (MSRVVP) உதவியுடன் இந்த 2 வாரியங்கள் அமைக்கப்படும் என்றார். இந்த கல்வி வாரியங்கள் பிறகு கல்வி வாரியங்களை போன்று செயல்படும் என்றும், வேதங்களை நவீன கல்வியுடன் இணைக்கும் நோக்கில் இது உருவாக்கப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications