வைகோ யார் தெரியுமா? துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு சொன்ன வார்த்தை - ராஜ்யசபாவில் நெகிழ்ச்சி
டெல்லி: நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் இந்தியாவின் வலிமையான பேச்சாளர்களின் வைகோவும் ஒருவர் என்று சொல்வதில் எனக்கு தயக்கமில்லை என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டியுள்ளார்.
கடந்த வாரம் தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடரில் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக நாடாளுமன்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வந்தன.
பண வீக்கம், பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கவும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதன் காரணமாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

விலைவாசி விவாதம்
இந்த நிலையில் நேற்று முன் தினம் லோக்சபாவிலும், நேற்று ராஜ்ய சபாவிலும் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் மத்திய அரசையும், அதன் பொருளாதார கொள்கைகளையும், ஜி.எஸ்.டி. வரி உயர்வையும் கடுமையாக விமர்சித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

வைகோ
நேற்று நடைபெற்ற இந்த விவாதத்தில் பேச எழுந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, "தாங்கள் பேச 2 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருக்கிறது." என்று கூறினார். இதனை கேட்ட வைகோ, இதுவே அதிகமான நேரம்தான் என்று சொல்லி தனது பேச்சை தொடங்கினார்.

மெதுவாக கொல்லும் விஷம்
"அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தேவைகளுக்கான விலை உயர்த்தப்படுவது நாட்டு மக்களை மெதுவாக கொல்லும் விஷம். தானியங்கள் விலை, மசாலா பொருட்கள் விலை, சமையல் எண்ணெய் விலை, வெண்ணெய் விலை போன்றவை உயர்ந்துள்ளது. பணவீக்க விகிதத்தை 2 முதல் 6% வரை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்த நிலையில், தற்போது அதுவும் உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை திரும்பப்பெற வேண்டும். நீங்கள் அனுமதித்த நேரத்துக்குள் பேசி முடித்துவிட்டேன்" என்று கூறினார்.
Recommended Video

வெங்கய்யா நாயுடு புகழாரம்
அதன் பின்னர் பேசிய வெங்கய்யா நாயுடு, "இளைய மற்றும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் வலிமையான பேச்சாளர்கள் வைகோவும் ஒருவர். இதை சொல்வதில் எனக்கு தயக்கமும் இல்லை. அவரது கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் நேரத்தை எண்ணால் அதிகரிக்க முடியவில்லை." என்று கூறி பாராட்டினார்.












Click it and Unblock the Notifications