இஸ்லாமிய பெண்களின் வாக்குகள் பாஜகவுக்கு தான்! காங்கிரஸ் என்ன செய்தது? விஜயதரணி தடாலடி!
டெல்லி: முத்தலாக்கை தடை செய்ததன் மூலம் இஸ்லாமிய பெண்களின் உரிமையை மத்திய பாஜக அரசு நிலை நாட்டியுள்ளதாக விஜயதரணி கூறியிருக்கிறார்.
இஸ்லாமிய பெண்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து அவர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபடவே இல்லை என்றும் இன்று இஸ்லாமிய பெண்களின் வாக்குகள் மொத்தமாக பாஜகவுக்கு தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய பெண்களுக்கு பல்வேறு நன்மை தரக்கூடிய நடவடிக்கைகளில் பாஜக அரசு ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா இயங்க வேண்டும் என்பது தான் நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது என்றும் அதனால் தான் தன்னை போன்றவர்கள் பாஜகவில் இணைந்து வருகிறோம் எனவும் விஜயதரணி தெரிவித்துள்ளார். பாஜகவில் மட்டுமே பெண்களுக்கு அதிகமாக வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்றும் பாஜகவில் மட்டுமே பெண் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அதிகமாக உள்ளார்கள் எனவும் புள்ளிவிவரத்தை அடுக்கினார்.
தேர்தல் அரசியலில் தன்னை போன்றவர்கள் பாஜகவுக்கு பயனுள்ளதாக இருப்போம் என்றும் அண்ணாமலை மேற்கொண்டு வரும் பாத யாத்திரை மூலம் தமிழ்நாட்டில் பாஜக எழுச்சி பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட பாஜக தலைமை சீட் கொடுத்தால் போட்டியிடுவேன் என்றும் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் எனவும் விஜயதரணி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முகாமிட்டுள்ள விஜயதரணி இன்றோ நாளையோ சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது. இவரை பாஜகவில் இணைத்த பின்னணியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக எம்.எல்.ஏ. பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் தாம் விலகி கொள்வதாக மல்லிகார்ஜுனே கார்கேவுக்கு விஜயதரணி கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே விஜயதரணியை ஒரு போதும் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் விமர்சித்திருப்பது கவனிக்கத்தக்கது.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து விலகி வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்பது விதி. அதன் அடிப்படையில் விஜயதரணியை தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகர் அப்பாவுவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் அதற்கு வேலையே இல்லாத வகையில் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தாம் ராஜினாமா செய்வதாக விஜயதரணியே அறிவித்துவிட்டார்.












Click it and Unblock the Notifications