தமிழ்நாடு உட்பட.. 12 மாநிலங்களில் நாளை முதல் S.I.R மேற்கொள்ளப்படும்! தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
டெல்லி: பீகாரில் வாக்காகளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) மேற்கொள்ளப்பட்டிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 12 மாநிலங்களில் நாளை முதல் SIR பணிகள் தொடங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, குஜராத் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் கூறியிருக்கிறார். இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்,

"முதல்கட்டமாக பீகாரில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நாளை முதல் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், சேர்ப்பு ஆகியவை இன்று நள்ளிரவு முதல் நிறுத்தப்படும். சிறப்புத் தீவிர திருத்தப் பணியின் இரண்டாம் கட்டத்திற்கான வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான பயிற்சி நாளை முதல் தொடங்கும்.
வீடு வீடாக சென்று வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணிகள் நவ.4ம் தேதி முதல் டிச.4ம் தேதி வரை நடைபெறும். இந்த பணிகள் முடிந்து டிச.9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் டிச.9 முதல் ஜன.8 வரை தெரிவிக்கலாம். ஆட்சேபனை தொடர்பான சரிபார்ப்புகள் டிச.9 முதல் ஜன.31 வரை மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் எல்லாம் முடிந்து பிப்.7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்" என்று கூறியுள்ளார்.
S.I.R குறித்து தேர்தல் ஆணையர் விடுத்துள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் அல்லது நாட்டின் சில பகுதிகளில் வாக்காளர் பட்டியல்களின் தீவிர திருத்தங்கள் இதற்கு முன்னர் 1952-56, 1957, 1961, 1965, 1966, 1983-84, 1987-89, 1992, 1993, 1995, 2002, 2003 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு திருத்தமும், ஆரம்பகால நிர்வாகக் குறைபாடுகளைச் சரி செய்வது முதல், இடப்பெயர்வு, தொகுதி மறுவரையறை, மற்றும் பட்டியல்களின் தரம் குறித்த கவலைகள் வரை - தேர்தல் ஆணையத்தின் மாறிவரும் முன்னுரிமைகளைப் பிரதிபலித்தன.
சுதந்திரத்திற்குப் பிந்தைய முதல் பத்தாண்டில், 1951-52 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பட்டியல்களைச் சரிசெய்வதே மிக முக்கியமான பணியாக இருந்தது. அந்தப் பட்டியல்கள் பிழைகள் மற்றும் விடுபடல்களால் நிறைந்து இருந்தன. முதல் தேர்தல் குறித்த ஆணையத்தின் விளக்க அறிக்கையில், இறுதி வாக்காளர் பட்டியல்கள் எப்போதும் விரும்பிய அளவுக்குத் துல்லியமாகவும் திருப்தியாகவும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குறைபாடுகளுக்குப் பல காரணங்கள் கூறப்பட்டன பரவலான பொதுமக்களின் அறியாமை, அரசியல் கட்சிகளிடம் இருந்த குறைந்தபட்ச அமைப்புத் திறன், மற்றும் அரசு இயந்திரத்தின் அனுபவமின்மை ஆகியவை அவற்றில் அடங்கும். ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம், முதல் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பெண்களைப் பெருமளவில் நீக்கியது ஆகும். அதாவது, பல பெண்கள் வாக்காளர் கணக்கெடுப்பாளர்களிடம் தங்கள் பெயர்களைக் கொடுக்க மறுத்து, அதற்குப் பதிலாகத் தங்களை மனைவி அல்லது மகள் என்று மட்டுமே அடையாளப்படுத்திக் கொண்டனர்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications