"தவறு செய்தது நான் தான்!" பஞ்சாப் தோல்வி பற்றி செயற்குழு கூட்டத்தில்.. சோனியா காந்தி பரபர பேச்சு
டெல்லி: நேற்று நடைபெற்ற காங். செயற்குழு கூட்டத்தில் பஞ்சாப் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்ட முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் கடந்த மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் உபி, உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியவில்லை.
தோல்வி.. ராஜினாமா அறிவிப்பு! தோல்வி.. ராஜினாமா அறிவிப்பு! ரிப்பீட்டு.. காங்கிரஸ் எப்போதுதான் மாறும்?
பஞ்சாப் தேர்தல்
குறிப்பாகப் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைப் பதிவு செய்தது. பஞ்சாபில் பாஜக வலுவாக இல்லை, அதேநேரம் அங்கு ஆம் ஆத்மி அசுர வளர்ச்சியைப் பெற்றது. கடந்த 2017 தேர்தலில் 20 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்த ஆம் ஆத்மி கட்சி, இந்தத் தேர்தலில் 92 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியால் வெறும் 18 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. குறிப்பாக காங். முதல்வராக இருந்த சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார்..
செயற்குழு கூட்டம்
இந்தத் தோல்வி காங்கிரஸ் கட்சியில் தலைமை குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியது. காங்கிரசில் தலைமை பொறுப்பில் மாற்றம் தேவை என்றும் இந்த மாற்றத்தை இனியும் தவிர்க்க முடியாது என்றும் அக்கட்சியின் அதிருப்தி ஜி23 தலைவர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்த நேற்று, மார்ச் 13ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டம் சுமார் 2.30 மணி நேரத்திற்கும் மேல் நீட்டித்தது.
என்ன காரணம்
சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாகப் பஞ்சாப் மாநிலத்தில் இப்படியொரு மோசமான தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து இதில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. பஞ்சாப் காங்கிரஸில் நிலவி வரும் மோசமான உட்கட்சி பூசல், கேப்டன் அமரிந்தர் சிங்கை தாமதமாக முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது ஆகியவை தோல்விக்கு முக்கிய காரணம் எனப் பஞ்சாப் காங். பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி இந்த கூட்டத்தில் குறிப்பிட்டார்.
பெரும் தவறு
அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ஒருவர், அமரிந்தர் சிங்கை பதவி நீக்கம் செய்ய முடிவெடுத்திருந்தால் அதை முன் கூட்டியே செய்து இருக்க வேண்டும் என்றும் இந்த காலதாமதம் அரசுக்கு எதிரான மனநிலை அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிட்டது என்றார். இதற்குப் பதிலளித்த சோனியா காந்தி, "இந்த விஷயத்தில் தவறு செய்தது நான் தான். அமரிந்தர் சிங் மீது பல்வேறு புகார்கள் எழுந்த போதிலும், அவரை நான் காப்பாற்றியது பெரும் தவறு" என்று கூறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் அரசியல்
பஞ்சாப் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு, கடந்த ஆண்டு செப் மாதம் பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அமரிந்தர் சிங் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டார். அதேபோல தேர்தல் நெருங்கிய சமயத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதிலும் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் நவ்ஜோத் சிங் சித்து இடையே கடும் போட்டி இருந்தது. இறுதியில் சரண்ஜித் சிங் சன்னி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதிலும், அவரால் வெல்ல முடியவில்லை.