உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவை இயக்கிய 'அன்னிய சக்திகள்': குரியன் ஜோசப் பரபர
Recommended Video
டெல்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளியில் இருந்து யாராலோ இயக்கப்படுவதாக மூத்த நீதிபதிகளுக்கு சந்தேகம் இருந்தது என்று, சில தினங்கள் முன்பாக, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 12ம் தேதி இந்திய நீதித்துறை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள். நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய் (தற்போதைய தலைமை நீதிபதி), மதன் லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இது தொடர்பாக பகிரங்கமாக செய்தியாளர்களிடம் பேசினர்.
இந்த நிலையில் சமீபத்தில் நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற குரியன் ஜோசப், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
அன்னிய சக்திகள்
இந்த பேட்டியில், தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பிரஸ் மீட்டின் தேவை என்ன என்பது குறித்தும் குரியன் ஜோசப் விளக்கியுள்ளார். பல்வேறு சம்பவங்களை வைத்து பார்த்தபோது, உச்ச நீதிமன்றத்தில் பணியில் வெளியில் இருந்து சக்திகள் தலையிடுவதை உணர்ந்தோம். வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் நடைமுறையில் இதை கவனிக்க முடிந்தது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும்போதும், இதேபோன்ற நிலை இருந்தது.
கடிதம் எழுதினோம்
யாரோ வெளியில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கட்டுப்படுத்தியதாக நாங்கள் உணர்ந்தோம். எனவேதான், நாங்கள் அவரை சந்தித்தோம். கடிதம் எழுதி, உச்சநீதிமன்ற மாண்பையும், சுதந்திரத்தன்மையையும் காக்குமாறு கேட்டுக்கொண்டோம். அனைத்து முயற்சிகளுமே தோல்வியில் முடிந்தபோதுதான், நாங்கள் பிரஸ்மீட் செய்ய முடிவு செய்தோம்.
அனைவரும் ஏற்றோம்
அரசியல் ரீதியாக சார்பு கொண்டவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டதை பார்த்தோம். வெளியில் இருந்து நீதிமன்ற விவகாரங்களில் தலையீடு இருந்தது நன்கு தெரிந்தது. நீதிபதி செல்லமேஸ்வர்தான், பிரஸ் மீட் யோசனைக்கான முன்னோடி. இதை பிற மூவருமே ஏற்றுக்கொண்டோம்.
உழைப்பால் உயர்ந்தவர்
நீதிபதி குரியன் ஜோசப், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, உச்சநீதிமன்றத்தின் 3வது சீனியர் நீதிபதி அந்தஸ்து வரை உயர்ந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது தந்தை கேரள உயர்நீதிமன்றத்தில் கிளர்க்காக பணியாற்றியவர். அதே நீதிமன்றத்தில் தனது 26வது வயதில் வழக்கறிஞராக பிராக்டீசை ஆரம்பித்தவர் குரியன் ஜோசப். 1994ம் ஆண்டு, கேரளாவின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணி நியமனம் செய்யப்பட்ட இவர், 1996ம் ஆண்டு சீனியர் வழக்கறிஞராக பதவி உயர்வு பெற்றார்.