வங்கதேசம் மட்டுமல்ல.. கடந்த 5 ஆண்டில் ராணுவம் ஆட்சியை பிடித்த நாடுகள் எவை தெரியுமா? லிஸ்ட் பெருசு
டெல்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில், உலகெங்கிலும் உள்ள பல அரசுகள் வீழ்ச்சியடைந்துள்ளன.. அரசியல் ஸ்திரமின்மை, பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சமூக அமைதியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இது நடந்துள்ளன. இலங்கை, பாகிஸ்தான் எனக் கடந்த 5 ஆண்டுகளில் பெரிய சிக்கல்களைச் சந்தித்த நாடுகள் குறித்து நாம் பார்க்கலாம்.
இப்போது வங்கதேசத்தில் மக்கள் போராட்டம் காரணமாக அந்நாட்டின் அதிபர் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அங்கே ராணுவம் ஆட்சி அமைத்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு உலக நாடுகளில் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
வடக்கு ஆப்பிரிக்கா: முதலில் சூடான்.. வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2019ம் ஆண்டு ராணுவ ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்டது. அங்கே பொருளாதார சிக்கலே மக்கள் போராட்டத்திற்கு வழிவகுத்தது. இதைக் காரணமாக வைத்து அங்கு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதன் மூலம் கடந்த 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஒமர் அல்-பஷீரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதே ஆண்டில் மற்றொரு வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவிலும் அதிபர் அப்தெலாசிஸ் பௌட்ஃபிலிகாவுக்கு எதிராகப் போராட்டங்கள் வலுத்த நிலையில், அவர் ராஜினாமா செய்தார்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், 2019 ஆம் ஆண்டில் அரசியல் நெருக்கடி மிகப் பெரியளவில் வெடித்தது. அங்கே நிக்கோலஸ் மதுரோ என்பவர் அதிபராக இருந்த நிலையில், அவருக்குச் சவால் விடுக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோ தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டார். அங்கே ஏற்கனவே பொருளாதார சிக்கலால் மக்கள் மோசமான சூழலில் தள்ளப்பட்டு இருந்த நிலையில், இது நிலைமை மேலும் மோசமாக்கியது.
ஆப்கானிஸ்தான்: 2020ம் ஆண்டில் கொரோனா காரணமாக மொத்த உலகமும் ஊரடங்கால் முடங்கிப் போய் இருந்தது. இதனால் ஐந்தாண்டு எங்கும் ஆட்சி கவிழ்ப்போ அல்லது ராணுவ ஆட்சியோ ஏற்படவில்லை. அதேநேரம் அதற்கு மறு ஆண்டே ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றின. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது ஆப்கானில் மிகப் பெரிய குழப்பத்திற்கு வழிவகுத்தது. சில வாரங்களில் அங்கே காட்சிகள் மொத்தமாக மாறின. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தூக்கியெறியப்பட்டு தாலிபான்கள் ஆட்சி அமைந்தன.
அதே 2021ம் ஆண்டில் வடக்கு ஆப்பிரிக்காவின் துனிசியாவின் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அதிபர் கைஸ் சையத் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு சர்வாதிகாரியானார். அடுத்து 2022இல் மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாசோவில் அதிபர் ரோச் மார்க் கிறிஸ்டியன் கபோரின் ஆட்சியை ராணுவம் கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றியது. நாட்டின் பாதுகாப்பை ரோச் மார்க் உறுதி செய்யவில்லை என்று கூறி ராணுவம் ஆட்சியைப் பிடித்தது.
பாகிஸ்தான்: அதே ஆண்டில் தான் பாகிஸ்தானிலும் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார். 2022ல் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதில் நேரடியாக ராணுவம் தலையிடவில்லை என்ற போதிலும், அந்நாட்டின் ராணுவ தளபதியே இதற்குக் காரணம் என அப்போது சொல்லப்பட்டது.
இலங்கை: நமது அண்டை நாடான இலங்கையிலும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியால் ஆட்சி கவிழ்ந்தது. கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே ஓடினார். இதனால் அங்குள்ள அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு அங்குப் பல அரசியல் மாற்றங்கள் நடந்தன. இன்னுமே கூட இலங்கை முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. கடந்த 2023ல் நைஜர், காபோன் நாடுகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சி அமைத்துள்ளன. இந்த பெரிய லிஸ்டில் வங்கதேசம் இப்போது இணைந்துள்ளது.












Click it and Unblock the Notifications