நீட் மாணவர்களே! பேனா, பென்சில் கொண்டு வர்றீங்களோ இல்லையோ.. கட்டாயம் இதெல்லாம் கொண்டு வரணும்!
டெல்லி: நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு எழுத வரும் மாணவர்கள் கட்டாயம் முகக் கவசமும் கையுறைகளையும் அணிய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா நேரத்தில் இந்த தேர்வை நடத்தித்தான் ஆக வேண்டுமா என பெற்றோர்களும் எதிர்க்கட்சியினரும் கொந்தளிக்கிறார்கள்.
எனவே நீட் தேர்வை ஒத்தி வையுங்கள் என்ற கோரிக்கைகள் வலுக்கின்றன. ஆனால் மத்திய அரசோ முடியாது, நீட் தேர்வை ஒத்தி வைத்தால் மாணவர்களுக்கு ஓராண்டு வீணாகிவிடும் என்கிறது.

அனுமதி சீட்டு
இதுவரை நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கு 17 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுமதி சீட்டை டவுன்லோடு செய்துள்ளார்கள். எனவே தேர்வு எழுதுவதில் மாணவர்களுக்கு விருப்பம் உள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையை எழுப்பாமல் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது மத்திய அரசு.

பாதுகாப்பு
மேலும் தேர்வு எழுத வரும் மாணவர்கள் பாதுகாப்பாக தேர்வு எழுத நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு வாதிடுகிறது. அதன்படி மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாணவர்கள்
தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கைகளில் கையுறைகளை அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கு தேவையான தண்ணீர் பாட்டிலை கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது. அதுபோல் கிருமிநாசினியையும் கொண்டு வர வேண்டும்.

பெற்றோருக்கு அனுமதி இல்லை
மாணவர்கள் கூட்டமாக நிற்க அனுமதி இல்லை. தேர்வு மையங்களில் வரைந்திருக்கும் வட்டங்களில் மட்டுமே மாணவர்கள் நிற்க வேண்டும். மாணவர்கள் உள்ளே வருவதும் வெளியே செல்வதும் சீராக இருக்கும். தேர்வு மையங்களில் மாணவர்களை விட்டுச் செல்லும் பெற்றோர் அங்கு அமர்ந்திருக்க அனுமதி இல்லை.

ஊழியர்கள்
தேர்வு கூடத்திற்கு வந்துவிட்டால் மாணவர்களை அறையை விட்டு செல்ல அனுமதி அளிக்கப்படாது. தேர்வு கூட பொறுப்பாளர்களின் அனுமதி பெற்ற பிறகே தேர்வு கூடத்தை விட்டு ஒவ்வொருவராக வெளியேற வேண்டும். அது போல் தேர்வு கூடத்தின் நுழைவு வாயிலில் மாணவர்கள், ஊழியர்களின் உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படும். ஒருவேளை 99.4 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக இருந்தால் அவர்கள் தனியே அமர வைத்து தேர்வு எழுதப்படுவர்.












Click it and Unblock the Notifications