"சிப்+ ஆண்டனா.." புதிய இ-பாஸ்போர்ட்களை அறிமுகம் செய்த மத்திய அரசு.. இனி ஒரு தப்பு கூட நடக்காது!
டெல்லி: நமது நாட்டில் பாதுகாப்பை அதிகரிக்கவும் பொதுமக்களின் சவுகரியத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்போது மத்திய அரசு இ பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் கீழ் இ-பாஸ்போர்டுகளை வழங்க முடிவு செய்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணங்களின்போது குடிவரவுத் துறை அதிகாரிகள் பாஸ்போர்ட் வெரிபிக்கேஷனை தாண்டுவது எல்லாருக்கும் ஒரு அழுத்தமான பிராசஸ் தான். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி, அவர்கள் நமது பாஸ்போர்ட்டை வெரிப்பை செய்து பிறகே அனுமதிப்பார்கள்.

புதிய பாஸ்போர்ட்
இதற்கிடையே இந்த பாஸ்போர்ட் வெரிப்பை செய்யும் பிராசஸை எளிமைப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய வகை பாஸ்போர்டுகளை அறிமுகம் செய்துள்ளது. இது பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி பாஸ்போர்ட்டில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிநவீனப் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த இ-பாஸ்போர்ட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த 2024 ஏப்ரல் 1ம் தேதி அமல்படுத்தப்பட்ட பாஸ்போர்ட் சேவா திட்டம் வெர்ஷன் 2.0இன் ஒரு பகுதியாகவே இந்த இந்த இ-பாஸ்போர்ட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதலில் சோதனை முயற்சியில் பைலட் திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக முடிந்தால் இதை விரிவுபடுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
எந்த 13 நகரங்கள்?
முதற்கட்டமாக இப்போது நாக்பூர், புவனேஸ்வர், ஜம்மு, கோவா, சிம்லா, ராய்ப்பூர், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், சென்னை, ஹைதராபாத், சூரத், ராஞ்சி மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்போருக்கு இந்த இ பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. முதலில் சோதனை முறையில் இந்த நகரங்களில் இ பாஸ்போர்ட் வழங்கப்படுவதாகவும் விரைவில் நாடு முழுக்க இந்த இ பாஸ்போர்ட் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த மார்ச் 3ம் தேதி முதல் சென்னையின் பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிப்போருக்கு இ பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 22ம் தேதி வரை 729 பேருக்கு இ- பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டிருந்தன.
பாதுகாப்பு அம்சங்கள்
இந்த இ-பாஸ்போர்ட்களில் ஒரு ஆண்டெனா மற்றும் ஒரு ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) சிப் ஆகியவை இருக்குமாம். அதற்காக மினி ஆண்டெனா பாஸ்போர்ட் வெளியே தெரியும் என நினைக்க வேண்டாம். எல்லாமே அட்டைக்குள் தான் இருக்கும். சின்ன சிம் போன்ற ஒன்று மட்டுமே கீழே உள்பக்க அட்டையில் தெரியும். முன் அட்டையின் கீழே தங்க நிறச் சின்னமே சாதாரண பாஸ்போர்ட்டுகளிலிருந்து இந்த இ பாஸ்போர்ட்களை வேறுபடுத்திக் காட்டும்.
மோசடியைத் தடுக்கும்
பிகேஐ அதாவது Public Key Infrastructure என்ற கட்டமைப்பு தான் இந்த இ பாஸ்போர்ட்டை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் தான் தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் மிகப் பாதுகாப்பாக வைக்கப்படும். பயோமெட்ரிக் மற்றும் தனிப்பட்ட தரவுகள் இங்கு தான் சேமிக்கப்பட்டு இருக்கும்.
மேம்பட்ட டேட்டா பாதுகாப்பிற்கே முக்கியத்துவம் கொடுத்த இந்த இ பாஸ்போர்ட் உருவாக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் உரிமையாளரின் தகவல்களைப் பாதுகாக்கும் அதேநேரம் போலி பாஸ்போர்ட்களை உருவாக்கவே முடியாத வகையில் பாதுகாப்பு அம்சங்களையும் இது கொண்டுள்ளது.
ஏற்கனவே உள்ள பாஸ்போர்ட்கள்
இப்போது நம் அனைவருக்கும் மற்றொரு கேள்வியும் வரும். இதன் காரணமாக ஏற்கனவே சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்போர் இ பாஸ்போர்ட் பெற வேண்டுமா என்ற கேள்வி வரும். ஆனால், கட்டாயம் அனைவரும் இ பாஸ்போர்ட்டிற்கு மாற வேண்டும் என இப்போது எந்தவொரு நிபந்தனையும் இல்லை. இதனால் மத்திய அரசு வழங்கிய அனைத்து பாஸ்போர்ட்டுகளும் அந்தந்த தேதிகள் வரை செல்லுபடியாகும்.












Click it and Unblock the Notifications