வயநாடு, ரேபரேலியில் ராகுல் ஜெயித்தால்..'போட்டு வைத்த காங்கிரஸ் திட்டம் ஓகே கண்மணி' ஆகுமா?
டெல்லி: கேரளாவின் வயநாடு, உ.பி. ரேபரேலி ஆகிய லோக்சபா தொகுதிகளில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெறும் நிலையில் அடுத்ததாக பிரியங்காவை களமிறக்க காத்திருக்கிறதாம் காங்கிரஸ் மேலிடம்.
18-வது லோக்சபா தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய தொகுதிகளில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகள் அடக்கம். 2019-ம் ஆண்டு கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். வயநாட்டில் ராகுல் காந்தி 64.94% வாக்குகளைப் பெற்று அசத்தல் வெற்றியை அறுவடை செய்தார். ரேபரேலி தொகுதியில் 2019-ல் போட்டியிட்ட சோனியா காந்தி 167,178 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியைப் பெற்றார். சோனியா காந்தி பெற்ற வாக்கு சதவீதம் 55.80%.

இந்த முறை வயநாட்டில் மீண்டும் ராகுல் காந்தியே போட்டியிடுகிறார். ரேபரேலியிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலிலும் அமேதி, வயநாடு தொகுதிகளில் ராகுல் போட்டியிட்டார். ஆனால் அமேதியில் ராகுல் தோற்கடிக்கப்பட்டார். 2-வது முறையாக 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி கடந்த முறை போல அதிகமான வாக்கு வித்தியாசத்தில் இம்முறை வெல்வாரா? என்பது விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸுடன் கை கோர்த்து நிற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனி ராஜாவை ராகுல் காந்திக்கு எதிராக வயநாட்டில் களமிறக்கி உள்ளது. இதனால் வயநாடு தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது. ரேபரேலி தொகுதியைப் பொறுத்தவரையில் 35% தலித் வாக்காளர்களைக் கொண்டது. இந்திரா காந்தி குடும்பத்தின் கோட்டை என்பதால் பெரும் நம்பிக்கையும் காங்கிரஸ் இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் ராகுல் காந்தி இரு தொகுதிகளிலும் ஜெயித்தால் நிச்சயம் வயநாடு தொகுதி எம்பியாகவே இருப்பார் என கூறப்படுகிறது. ரேபரேலி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தாக வேண்டும்; அப்படி ரேபரேலி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யும் போது அங்கு இடைத்தேர்தல் நடைபெறும். அந்த இடைத்தேர்தலில் ராகுலின் தங்கை பிரியங்கா காந்தியை வேட்பாளராக களமிறக்கலாம் என்பதுதான் காங்கிரஸின் திட்டம். ஒரே நேரத்தில் ராகுலையும் பிரியங்காவையும் லோக்சபாவுக்கு அனுப்பி பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக களமாடச் செய்ய வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் திட்டம் என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications