எல்லா பக்கமும் சூழும் பிரச்சினை.. ஹசீனாவின் அடுத்தகட்ட திட்டம் என்ன? வெளியுறவுத்துறை பளிச் விளக்கம்
டெல்லி: வங்கதேசத்தில் பற்றி எரிந்த வன்முறை காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஹசீனா இப்போது இந்தியா வந்துள்ளார். அவர் பிரிட்டனில் அடைக்கலம் கோர உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், சில சிக்கல்கள் காரணமாக அதில் தடை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஹசீனாவின் எதிர்கால திட்டம் என்ன என்பது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் சில தகவல்களைத் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் நிலவும் வன்முறை காரணமாக ஹசீனா தற்போது இந்தியா வந்துள்ளார். அதேநேரம் நீண்ட நாட்கள் இந்தியாவில் இருக்கும் திட்டம் அவருக்கு இல்லை என்று சொல்லப்பட்டது.

அவர் முதலில் பிரிட்டன் நாட்டில் அடைக்கலம் கோருவார் எனக் கூறப்பட்டது. இருப்பினும், பிரிட்டன் நாட்டின் சில விதிகளால் அவருக்கு அங்கு அனுமதி தரப்படவில்லை. இதனால் அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்பதில் குழப்பமே நிலவி வந்தது.
வெளியுறவுத் துறை விளக்கம்: இந்தச் சூழலில் தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. அதாவது ஷேக் ஹசீனாவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் எப்போது இந்தியாவை விட்டு வெளியேறுவார் என்று கேள்விக்கு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இந்த பதிலை அளித்துள்ளார்.
வங்கதேசத்தில் போராட்டக்காரர்கள் ஹசீனாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நுழைந்து சூறையாடினர். நல்வாய்ப்பாக அதற்குக் கொஞ்ச நேரம் முன்பு ஹசீனா தனது ராணுவ விமானம் மூலம் இந்தியா வந்தார். பிரிட்டன் நாட்டின் விதிகளின்படி தற்காலிக அடைக்கலம் பெற மட்டுமே ஒருவரால் அந்நாட்டிற்குச் செல்ல முடியாது என்பதாலேயே அவரால் பிரிட்டன் செல்ல முடியவில்லை.
சஜீப் வசேத்: இதற்கிடையே ஹசீனாவின் மகன் சஜீப் வசேத் பிரபல ஆங்கில ஊடகத்தில் சில முக்கிய கருத்துகளைப் பதிவு செய்தார். அதாவது இந்தியா உட்பட எந்த நாட்டிலும் புகலிடம் கோரி அவரது தாயார் கோரிக்கைகளை முன்வைக்கவில்லை என்று கூறினார். சஜீப் வசேத் மேலும் கூறுகையில், "புகலிடம் கோருவது குறித்து வெளியாகும் செய்திகள் தவறானவை. அவள் எங்கும் புகலிடம் கோரவில்லை. இங்கிலாந்து அல்லது அமெரிக்காவில் அவர் புகலிடத்திடம் கோரியுள்ளதாக வரும் தகவல்கள் பொய்யானவை" என்றார்.
இருப்பினும், அவர் எங்கே புகலிடம் கோருவது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவே கூறப்படுகிறது. பிரிட்டன் நாட்டில் புகலிடம் கோர முடியாத நிலையில், அவர் அமெரிக்காவுக்குச் செல்லலாம் எனக் கூறப்பட்டது. ஏனென்றால் ஹசீனாவின் மகன் சஜீப் இப்போது அமெரிக்காவில் தான் வசித்து வருகிறார். ஆனால், அதில் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. அதாவது ஹசீனா ஆட்சிக் காலத்தில் வங்கதேசம்- அமெரிக்கா உறவு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.
அமெரிக்காவில் சிக்கல்: குறிப்பாக இந்தாண்டு தொடக்கத்தில் வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடந்தது. அதில் ஹசீனாவின் அவாமி லீக் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், தேர்தலுக்கு முன்பாக அங்குள்ள பல பரிான எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு இருந்ததால் அமெரிக்கா இதற்கு அதிருப்தி தெரிவித்தது.
தேர்தலில் முறைகேடுகள் குறித்த விசாரிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்தது. மேலும், ஹசீனாவின் அமெரிக்க விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவருக்கு அமெரிக்கா செல்வதிலும் சிக்கல் நீட்டிக்கவே செய்கிறது.
அடுத்து என்ன: மேலும், ஆப்கானில் சிக்கல் நிலவிய போது அந்நாட்டின் அதிபர் ஐக்கிய அமீரகத்திற்குத் தான் சென்றிருந்தார். எனவே, அது குறித்தும் ஹசீனா ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்படிப் பல சிக்கல்கள் இருப்பதால் அவர் எங்குச் செல்வது என்பது குறித்து இன்னும் சில நாட்களில் தெரிய வரும் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications