"3 கோடி பேருக்கு வீடு.." பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி! தகுதி என்ன
டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகளைக் கட்ட ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தகுதி என்ன.. இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமராகப் பதவியேற்ற நிலையில், முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டும் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மோடியின் முதல் அமைச்சரவையிலேயே முடிவு எடுக்கும் அளவுக்கு முக்கியமானதாக இருக்கும் இந்த பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் என்றால் என்ன.. இத்திட்டத்தின் கீழ் உதவி பெறத் தகுதிகள் என்ன.. இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
PMAY என்றால் என்ன: PMAY என்றால் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்று அர்த்தம்.. நாட்டில் இருக்கும் அனைத்து ஏழைகளுக்கும் வீடு கட்டம் இத்திட்டம் கடந்த 2015 ஜூன் 25இல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்ட மானியம் வழங்கப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் சுமார் 3.04 கோடிக்கும் அதிகமான வீடுகள் கிராமப்புறங்களில் மட்டும் கட்டப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளில் சுமார் 75 சதவீதம் ஏழை மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கே செல்லும். கிராமப்புறங்களில் கட்டப்படும் வீடுகள், நகர்ப்புறங்களில் கட்டப்படும் வீடுகள் என இத்திட்டம் இரு முக்கிய பிரிவுகளைக் கொண்டதாக இருக்கிறது.
இரண்டு வகை: இதில் கிராமப்புறங்களில் கட்டப்படும் வீடுகள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் (PMAY-G) கீழ் வரும். முன்பு இந்திரா ஆவாஸ் யோஜன என்ற பெயரில் தனியாகச் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் 2016 பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது. நாடு முழுவதும் கிராமப்புறங்களில் குறைந்த மற்றும் அணுகக்கூடிய வீடுகளைத் தகுதியான பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
அடுத்து நகர்ப்புற ஏழைகளுக்காகக் கொண்டு வரப்பட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புறம் (PMAY-U) திட்டம்.. முதலில் 100 நகரங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்ட இத்திட்டம் பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. இப்போது நாடு முழுக்க 4,331 நகரங்கள் இத்திட்டத்தில் இருக்கிறது. இந்தத் திட்டத்தில் சேர விண்ணப்பிப்போருக்கு சில தகுதிகள் இருக்கிறது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
தகுதி: விண்ணப்பதாரர் நிச்சயம் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் நபர் பெயரிலோ அல்லது அவரது குடும்ப உறுப்பினரின் பெயரிலோ ஏற்கனவே வீடு இருக்கக்கூடாது என்பது இரு முக்கிய தகுதிகளாகும். இது தவிர ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக ஆண்டு வருமான வரம்பும் இருக்கிறது.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் (EWS) வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.. குறைந்த வருமானம் பெறும் பிரிவைச் சேர்ந்தவர்களின் (LIG) வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
நடுத்தர வருமானத்தைக் கொண்டவர்களில் MIG-1 பிரிவில் இருப்போரின் வருமானம் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். நடுத்தர வருமானத்தைக் கொண்டவர்களில் MIG-2 பிரிவில் இருப்போரின் வருமானம் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.. விண்ணப்பதாரர் வேறு எந்த வகையிலும் அரசு வழங்கும் வீட்டு வசதிகளைப் பெற்றிருக்கக்கூடாது.
கடைசி தேதி எப்போது: முதலில் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 2023 மார்ச் 31ஆம் தேதி காலக்கெடுவாக இருந்தது. பின்னர் அந்தக்காலக்கெடு 2024 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலக்கெடு: இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ PMAY போர்ட்டலுக்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதில் உள்ள தகவல்களைப் பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications