நாடாளுமன்றத்தில் திடீர் தாக்குதல்.. உண்மையில் என்ன காரணம்.. ராகுல் காந்தி பரபர பேச்சு! என்ன சொன்னார்
டெல்லி: நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நடந்த பாதுகாப்பு அத்துமீறல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே அதற்கான காரணம் என்ன என்று ராகுல் காந்தி விளக்கியுள்ளார்.
கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சிலர் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் லோக்சபா அவைக்குள் புகுந்து புகை வரும் குப்பிகளை வீசினர். அதேபோல நாடாளுமன்ற வளாகத்திலும் சிலர் ரகளை செய்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளார். மேலும், சிலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ப்ரே அட்டாக்: இந்த விவகாரத்தில் போலீஸ் நடத்திய விசாரணையில் பல மாதங்கள் திட்டமிட்டு அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியது தெரிய வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஸ்ப்ரே அட்டாக் நடத்திய இவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டமான உபா மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையால் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் உள்ளதாகவும் இதுவே நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் அத்துமீறித் தாக்குதல் நடத்தக் காரணமாக இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், இந்தியாவில் இப்போது உள்ள மிகப் பெரிய பிரச்சினை என்றால் அது வேலையில்லா திண்டாட்டம் தான் என்றும் அவர் சாடியுள்ளார்.
ராகுல் காந்தி பேச்சு: இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையால் இப்போது நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த வேலையில்லாத் திண்டாட்டமே நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறலுக்குக் காரணம்.. இந்திய மக்கள் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக வேலையின்மை திண்டாட்டம் இருக்கிறது.
பாதுகாப்பு மீறல் நடந்தது என்னவோ உண்மைதான். ஆனால், எதனால் அது நடந்தது? முக்கியப் பிரச்சினை வேலையின்மை. மோடி கொள்கைகள் வேலையின்மை பிரச்சினைக்குத் தீர்வை தரவில்லை. வேலையின்மையை அதிகரிக்கவே வைத்தது. மோடியின் கொள்கைகளால் ஏற்பட்ட வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவை தான் நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறலுக்குக் காரணம்" என்று அவர் சாடினார்.
மல்லிகார்ஜுன கார்கே தாக்கு: அதேபோல இந்த விவகாரம் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "பாதுகாப்பு மீறல் நடக்கவே இல்லை என்பது போல அமித் ஷா பேசுகிறார். நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதாக அமித் ஷா கூறுகிறார். அவர் மட்டும் காங்கிரஸ், நேரு மற்றும் காந்தி பெயரைத் தவறாகப் பயன்படுத்தி வாக்குகளைப் பெறுகிறார்" என்று சாடினார்.
நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் இதுவரை 6 பேரைக் கைது செய்துள்ளனர். அவர்கள் நாடாளுமன்றத்திற்குள் வர பாஜக எம்.பி பிரதீப் சிம்ஹா என்பவர் பாஸ் கொடுத்த நிலையில், பாஜகவே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்று சாடி வருகின்றனர். மேலும், நாடாளுமன்றத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், மத்திய அரசு தரப்பில் அப்படி எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை.












Click it and Unblock the Notifications