"ஜி20 மாநாடு.." இந்தியாவுக்கு இது ஏன் ரொம்ப முக்கியம்.. அதைவிட பிரதமர் மோடிக்கு இதில் என்ன லாபம்?
டெல்லி: டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டின் மூலம் உலகளவில் பல மாற்றங்கள் நடக்கப் போகிறது. உலகளவில் மட்டுமின்றி நமது நாட்டிற்கும் பிரதமர் மோடிக்கும் இதன் மூலம் பெரிய நன்மைகள் கிடைக்கவே போகிறது.
தலைநகர் டெல்லியில் இன்றும் நாளையும் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த 18வது ஜி20 உச்சி மாநாட்டில் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். அமெரிக்க அதிபர் பைடன் தொடங்கிப் பல தலைவர்கள் டெல்லிக்கு வந்துள்ளனர்.

ஜி20 நாடுகளைத் தவிர வங்கதேச பிரதமர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மன்னர் உட்பட ஒன்பது நாடுகளின் தலைவர்களும் இதில் விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இரு முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.
ஜி20 வரலாறு: 1990களில் மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து 1999இல் ஜி20 உருவாக்கப்பட்டது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும், வர்த்தகத்தில் 75 சதவீதத்திற்கும் மேல் மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கும் இந்த ஜி20 உறுப்பு நாடுகளில் இருந்தே வருகிறார்கள். சர்வதேச அளவில் பொருளாதார பிரச்சினைகளிலும் முடிவெடுக்க இதுவே முக்கிய பங்கு வகிக்கிறது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் ஜி20 அமைப்பில் உறுப்பினராக இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவது என்பது ஒவ்வொரு உறுப்பு நாட்டிற்கும் கொடுக்கப்படும் மரியாதையாகும். ஜி20 தலைமை பொறுப்பு என்பது சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டிற்கும் வழங்கப்படும். கடந்தாண்டு இந்தோனேசியாவில் இந்த மீட்டிங் நடந்த நிலையில், அடுத்தாண்டு பிரேசில் நாட்டிலும் அதற்கு அடுத்தாண்டு தென்னாப்பிரிக்காவிலும் நடக்க இருக்கிறது.
இந்தியா தலைமை: உண்மையில், இந்தியா 2022இல் தலைமை பொறுப்பிற்கு வர இருந்தது. இருப்பினும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து 2023இல் தலைமை பொறுப்பு ஏற்க இந்தியா முடிவு செய்தது. இந்த உச்சி மாநாட்டில் ஜி20 மாநாடு எடுத்த சில நடவடிக்கைகள் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.
உச்சி மாநாட்டிற்கு முன்னதாக வளரும் நாடுகளுக்கான குரலாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. ஜி20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க யூனியனுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இவை உண்மையாகவே பாராட்டுக்குரிய முயற்சிகள். உலகின் முன்னணி நாடுகள் ஒன்று கூடி ஆலோசித்து எடுக்கப்படும் இதுபோன்ற ஒரு அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் உள்ளே வருவது என்பது அவர்கள் அடுத்தகட்ட வளர்ச்சிக்குப் பெரியளவில் உதவும்.
விமர்சனம்: அதேநேரம் ஜி20 மாநாட்டில் நிதி நெருக்கடி தொடர்பான ஆலோசனை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனம் இருந்தே கொண்டே இருக்கிறது. அதேபோல இந்த மாநாட்டில் உக்ரைன் போர் குறித்துப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக தனக்கு இந்த மாநாட்டில் அழைப்பு விடுக்கப்படும் என்று உக்ரைன் பெரியளவில் எதிர்பார்த்தது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஜி20 சரியான களமாக இருக்கும் என அது கருதியது.
இருப்பினும், போரைப் பற்றிய எந்தவொரு குறிப்புக்கும் ரஷ்யா கடும் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், இதில் ஒருமித்த முடிவுகளை எடுக்க முடியவில்லை. உண்மையில், ரஷ்யா-உக்ரைன் மோதலை குறைப்பதும்.. உச்சி மாநாட்டை எந்தவொரு சிக்கலும் இல்லாமல் நடத்துவதும் தான் கடந்த ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதை இந்தியா வெற்றிகரமாகவே செய்துவிட்டது எனச் சொல்லலாம்.
இந்தியாவுக்கு என்ன லாபம்: இந்தியா, அதன் பன்முகத்தன்மை, கலாச்சாரம் மற்றும் திறன்களை உலகிற்கு முன்னிறுத்த இந்த ஜி20 நாட்டை முழுமையாகப் பயன்படுத்துகிறது. உச்சி மாநாடு உண்மையில் இந்தியாவைப் பற்றிய செய்திகள் சர்வதேச அளவில் கொண்டு சேர்க்கும். இந்த வாய்ப்பை இந்தியா மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது.
அதேபோல இந்த மாநாட்டின் மூலம் உள்நாட்டிலும் பிரதமர் மோடியின் இமேஜ் உயரவே செய்துள்ளது. உலக தலைவர்கள் அனைவரும் டெல்லியில் முகாமிட்டு, சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கும் நிலையில், மோடி தன்னை ஒரு உலக அரசியல்வாதியாக நிலைநிறுத்துவதன் மூலம் நாட்டிற்குள் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்கிறார். இது அடுத்தாண்டு நடக்கும் தேர்தலில் பெரியளவில் கைகொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications