நாளை வாக்கு எண்ணிக்கை.. திடீரென தேர்தல் ஆணையத்திற்கு பறந்த இரண்டு லெட்டர்.. என்ன மேட்டர்
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி என இரண்டும் தேர்தல் ஆணையத்தின் கதவுகளைத் தட்டியுள்ளன.
நமது நாட்டில் ஒரு வழியாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதலாம் கட்ட லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது.

நாளை லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இதற்கிடையே வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி என இரண்டும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை: வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த நிலையில், அதை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது. மறுபுறம் தேர்தல் செயல்முறையைக் குலைக்க எதிர்க்கட்சிகள் முயல்வதாக பாஜக தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளது.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் ஜனநாயக அமைப்புகளை நேரடியாகத் தாக்கி, தேர்தல் நடைமுறைக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கைச் சுட்டிக்காட்டிய பாஜக, முதலில் தேர்தல் நடத்தும் அமைப்புகள்.. அடுத்துத் தேர்தல் செயல்முறையை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இழிவுபடுத்துவதாகக் கூறியுள்ளனர்.
பாஜக: இது தொடர்பாக பாஜகவின் புகார் மனுவில், "அவர்கள் தெளிவாகத் திட்டமிட்டே இதைச் செய்து வருகிறார்கள்.. முதலில் அவர்கள் தேர்தல் அமைப்புகளைக் குறிவைத்தனர். நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வரும் பட்சத்தில் அடுத்துத் தேர்தல் செயல்முறை, வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவிபேட்கள் குறித்து கேள்வி எழுப்புவார்கள். தேர்தலில் தோல்வியடையும் போது யாரைப் பலி கிடா ஆக்கலாம் என்பதற்காகவே இப்படிச் செய்கிறார்கள். ஆனால், வாக்காளர்கள் யாரைத் தேர்வு செய்கிறார்கள் என்ற யதார்த்தத்தை அவர்கள் ஏற்க விரும்புவதில்லை" என்று கூறியுள்ளது.
நோட்டாவுக்கு கீழ் சென்ற காங்கிரஸ்.. ராகுல் காந்திக்கு விழுந்த இடி.. சிக்கிமில் நிலைமை ரொம்பவே மோசம்
காங்கிரஸ்: அதேபோல காங்கிரஸ் கட்சியும் தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து முறையிட்டது. தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்தைச் சந்திப்பது இது மூன்றாவது முறை என்ற காங்கிரஸ், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை சிசிடிவி இருக்கும் இடங்களிலேயே வைக்க வேண்டும் என வலியுறுத்தியது.

வாக்குச் சாவடியிலிருந்து வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை என்பதைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியது.. மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை அதிகாரிகள் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், ஒரு நாள் முன்னதாக இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியம்: நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், மதியத்திற்குள் யார் ஆட்சியை அமைப்பது என்ற டிரெண்ட் தெரிந்துவிடும். இந்தச் சூழலில் இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தை முறையிட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications