"ப்யூர் வெஜ்.." முட்டைக்கு கூட அனுமதி இல்லை.. இந்தியாவின் சைவ நகரம்.. இதை பற்றி உங்களுக்கு தெரியுமா!
டெல்லி: நமது நாட்டில் இறைச்சி சாப்பிடுவோர் கணிசமாக இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒரு நகரில் முழுக்க முழுக்க அனைத்து வகையான அசைவ உணவுகளுக்கும் முழுமையாகத் தடை விதித்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. அதுவும் இந்தியாவில் தான் அப்படியொரு நகரம் இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் அதிக சைவ உணவு உண்பவர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் குஜராத்தில் தான் இந்த நகரம் அமைந்துள்ளது. அங்கு பாவ்நகர் மாவட்டத்தின் பாலிதானா நகரம் தான் அசைவத்தைத் தடை செய்த நகரமாக மாறி இருக்கிறது.

இந்த நகரில் அசைவ உணவுகளை விற்க மட்டும் தடையில்லை, மாறாக இறைச்சி விற்பனைக்கே முழுமையாகத் தடை இருக்கிறது. இதற்கான காரணம் குறித்து நாம் பார்க்கலாம்.
அசைவத்திற்குத் தடை: பெரும்பாலானோர் நினைப்பது போல இது ஒன்னும் இந்து நகரம் இல்லை. இது ஜைன துறவிகள் மட்டுமே அதிகமாக வாழும் இடம். ஜைனத்தில் துறவு வாழ்க்கை முக்கியமானது. அவர்களுக்கான மடங்கள் உள்ள இடம் தான் இந்த நகரம். துறவறம் பூண்டு துறவு வாழ்வு வாழும் இடமாகும். இந்துக்களுக்கு எப்படி ரிஷிகேஷ், ஹரித்துவார் இருக்கிறதோ.. அதுபோல சமணர்களுக்கான புனித நகரம் என்றும் பாலிதானாவை குறிப்பிடலாம்.. ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த புனித நகரத்திற்குச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
பாலிதானா பகுதியில் உள்ள மலையில் பல ஆயிரம் கோயில்கள் உள்ளன.. சுமார் 3,745 படிக்கட்டுகளை ஏறித் தான் மலைக்குச் செல்ல முடியும்.. 1800 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலைக்கு ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சமணர்கள் வருகை தருவார்கள். இந்த சத்ருஞ்சய மலைகளில் சுமார் 800 ஜெயின் கோவில்கள் உள்ளன.
ஜெயின் சமூகத்தினர்: இங்கே நகரத்தில் உள்ள மிகவும் பிரபலமான ஜெயின் கோயில் ஆதிநாத் கோயில்.. இது ஜெயின் மதத்தின் முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பாலிதானா வரலாற்று நகரங்களில் ஒன்றாகும்.. சுற்றுலாவிற்கு மட்டுமல்ல, ஜெயின் மத ரீதியாகவும் இது முக்கிய இடத்தை பெறுகிறது. இது கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவே கருதப்படுகிறது.
ஜெயின் சமூகத்தினரைப் பொறுத்தவரை அவர்கள் யாருமே முட்டை, இறைச்சி என எந்தவொரு நான் வெஜ் உணவையும் சாப்பிட மாட்டார்கள். அவ்வளவு ஏன் நிலத்திற்கு அடியில் விளையும் காய்கறிகளைக் கூட சாப்பிட மாட்டார்கள். மேலும், நடக்கும் பொது சிறு பூச்சிகளை மிதித்துவிடக்கூடாது என்பதற்காக மயில் இறகை வைத்து நடக்கும் பாதையில் இருக்கும் பூச்சிகளைப் பக்கவாட்டில் நகர்த்திவிடுவார்கள். இந்த ஜெயின் சமூகத்தினர் அதிகம் இருக்கும் நகரில் தான் அசைவ உணவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.
எப்போது: அதேநேரம் பாலிதானா நகரில் எப்போதுமே இறைச்சிக் கடைகளுக்குத் தடை என்று சொல்ல முடியாது. அங்கு சுமார் 250 இறைச்சிக் கடைகள் இயங்கி வந்தன. ஆனால், இறைச்சிக் கடைகளை முழுமையாக மூட வேண்டும் என்று அங்குள்ள சுமார் 200 ஜெயின் துறவிகளின் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து குஜராத் அரசு இந்த நகரில் அசைவ உணவுகளை முழுமையாகத் தடை செய்துள்ளது.
நமது நாட்டில் ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்ற இந்து பெரும்பான்மை நகரங்களிலும் அசைவ உணவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டன. அதேநேரம் ஜெயின் சமூகத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகரம் ஒன்றில் அசைவ உணவுகளுக்குத் தடை விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
மற்ற நகரங்கள்: ரிஷிகேஷ், ஹரித்துவார் போன்ற புனித நகரங்களில் அசைவத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதைப் போல பாலிதானாவிலும் அசைவத்துக்கு முழுமையான தடை விதிக்க கோரி ஜெயின் துறவிகள் சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இப்போது பாலிதானாவை முன்மாதிரியாகக் கொண்டு ராஜ்கோட், வதோதரா, ஜூனாகத், அகமதாபாத்தில் நகரங்களிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications