பிரதமர் அறிவித்த 'அனைவருக்கும் வீடு திட்டம்'... அடைந்த பலன் என்ன?
டெல்லி : 2022ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் தனது தலைமையின் கீழ் இயங்கும் மத்திய அரசின் சார்பில் 2 கோடி வீடுகளை கட்டித் தர பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்தார். மோடி தலைமையிலான அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றுதற்கான நடவடிக்கைகளையும் முன் எடுத்தன. தன்னுடைய பொதுக்கூட்ட மேடைகளிலும் மோடி இது குறித்து தொடர்ந்து பேசி வந்தார். இது வரை அனைவருக்கும் வீடு திட்டத்தில் அடைந்துள்ள இலக்கு என்ன என்பதை இங்கே பார்க்கலாம்:
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் இந்திய அரசு 51 லட்சம் வீடுகளை கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் பல வீடுகள் கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ளன. 8 லட்சம் வீடுகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டும், 8 லட்சம் வீடுகள் பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டு அவர்கள் அந்த வீடுகளில் வசிக்கவும் தொடங்கியுள்ளனர். வீடு மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் கூடுதலாக 6,26,488 வீடுகளுக்கான கட்டுமானத்திற்கு அனுமதி தந்துள்ளது. நடுத்தர வர்க்க குடும்பத்தினருக்கு பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காக கடந்த மாதம் இந்த கூடுதல் அனுமதியானது அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் வாரியாக அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயனடைந்தவர்களில் உத்திரபிரதேசம் முதல் இடம் வகிக்கிறது. உத்திரபிரதேசத்தில் 2,34,879 வீடுகளும், ஆந்திரா மாநிலத்தில் 1,20,559 வீடுகளும் கட்ட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் 74,631 வீடுகள், பீஹாரில் 50 ஆயிரத்து 17 வீடுகள், சத்தீஸ்கரில் 30,371 மற்றும் குஜராத்தில் 29,185 வீடுகளும் கட்ட அனுமதி தரப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் 22,265 வீடுகளும் தமிழகத்தில் 20, 794 வீடுகளும் கட்ட ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் 13,421 வீடுகள், திரிபுராவில் 9,778 மற்றும் மணிப்பூரில் 2,588 வீடுகளுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. வெள்ளம் புரட்டிப் போட்ட கடவுளின் தேசமான கேரளாவில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தருவதற்காக புதிய ஒப்பந்தம் அளிக்குமாறு அந்த மாநில அரசிடம் கோரப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தகுதியுடைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்/ வீடுகளை இழந்தவர்களையும் உள்ளடக்கி இந்த புதிய ஒப்பந்தம் கேட்கப்பட்டுள்ளது. கேரளாவிற்கு ஏற்கனவே ரூ. 486.87கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications