கடவுள் கிட்ட கேட்டேன்.. அவர்தான் காங்கிரஸை விட்டு போக சொன்னாரு! பாஜகவில் ஐக்கியமான கோவா எம்எல்ஏக்கள்
டெல்லி: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோவாவில் பாஜகவில் ஐக்கியமாகி உள்ள நிலையில், இதற்கான காரணத்தை ஐக்கியமான எம்எல்ஏக்கள் விளக்கி உள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் உட்கட்சி மோதல் அக்கட்சியின் வளர்ச்சியை மிகக் கடுமையாகப் பாதிக்கிறது. பல மாநிலங்களில் இதனால் காங்கிரஸ் ஆட்சியையும் இழந்துள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இப்படித்தான் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, சிந்தியாவால் கவிழ்ந்தது. இப்படிப் பல நிகழ்வுகளை உதாரணமாகச் சொல்லலாம்.

கோவா
கோவாவிலும் தொடர்ச்சியாக இப்போது அதுதான் நடக்கிறது. 40 இடங்களைக் கொண்ட கோவா சட்டசபைக்குக் கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் பெரும்பான்மைக்கு 21 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற நிலையில், பாஜக 20 இடங்களிலும் காங்கிரஸ் 11 இடங்களிலும் வென்றது. அதேபோல ஆம் ஆத்மிக்கு இரு இடங்கள் கிடைத்தது. பாஜக சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது.

சத்தியம்
ஏற்கனவே கடந்த 2016இல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற எம்எல்ஏக்கள் சில ஆண்டுகளில் அப்படியே பாஜகவில் ஐக்கியமானார்கள். அதேபோன்ற நிகழ்வு மீண்டும் நடக்கக் கூடாது என்பதில் இந்த முறை காங்கிரஸ் உறுதியாக இருந்தது. இதன் காரணமாகவே தேர்தல் சமயத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், அவர்களைக் கோயிலுக்கு அழைத்துச் சென்று சத்தியம் காங்கிரஸ் காங்கிரஸ் தலைமை.

ஐக்கியம்
இது மக்களுக்குக் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கை என்று சொல்லப்பட்டது. இருப்பினும், இப்போது மீண்டும் அதே சம்பவம் தான் நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் 11 எம்.எல்.ஏக்களில் 8 பேர் நேற்று பாஜகவில் ஐக்கியமாகினர். மூன்றில் இரு பங்கு எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியமானதால் கட்சி தவால் தடை சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

காரணம்
இந்நிலையில், மூத்த தலைவரும் இந்த கட்சி தவாலை முன்னின்று நடத்தியவருமான திகம்பர் காமத் இது தொடர்பாகக் கூறியுள்ள கருத்துகளைப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. "நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன். சொல்லப்போனால் எனக்குக் கடவுள் நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. தேர்தலுக்கு முன்பு நாங்கள் கோயிலுக்குச் சென்று சத்தியம் செய்தது எல்லாம் உண்மை தான்.

அதிருப்தி
இப்போது மீண்டும் கோயிலுக்குச் சென்றேன். கடவுளிடம் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டேன். அவர் தான் உனக்கு எது சரி எனப் படுகிறதோ அதைச் செய்யலாம் என்று கூறினார். அதன் பின்னரே இப்படிச் செய்தோம்" என்று அவர் குறிப்பிட்டார். இதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ள காங்கிரஸின் தினேஷ் குண்டு ராவ், "அடுத்த முறை யாருக்கு சீட் வழங்குகிறோம் என்பதைப் பார்த்து முடிவு செய்ய வேண்டும். இவர்களுக்கு அதிகாரம் தான் அனைத்தும்.. கொள்கை இல்லாதவர்கள்" என்று சாடினார்.

மறுப்பு
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு திகம்பர் காமத் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியமாக உள்ளதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், அப்போது அவர்களுக்கு போதிய எம்எல்ஏக்கள் சப்போர்ட் கிடைக்கவில்லை. இதனால் இரு நாட்களுக்குப் பின்னர், அதை முற்றிலுமாக மறுத்த அறிக்கை கொடுத்த அதே திகம்பர் காமத் தான், இப்போது கட்சி மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி
பாஜகவுக்கு எதிராகப் பொதுமக்களை ஒருங்கிணைக்க ராகுல் காந்தி தலைமையில் மாபெரும் ஒற்றுமை பேரணி ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் காங்கிரஸ் எம்எல்ஏக்களே பாஜகவில் ஐக்கியமாகி உள்ளது காங்கிரஸ் கட்சிக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.












Click it and Unblock the Notifications