டக்கென தலைக்கேறிய கோபம்.. சிறு சண்டைக்கு காதலியை 35 பீஸாக வெட்டிய அப்தாப்! அதிர வைக்கும் வாக்குமூலம்
டெல்லி: நாட்டையே உலுக்கிய டெல்லி சாரதா படுகொலையில் குற்றவாளி அப்தாப் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெல்லியில் 27 வயது இளம்பெண்ணை அவரது காதலனே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலைக்குப் பின் அந்த இளைஞர் செய்த செயல்கள் பகீர் அளிப்பதாக உள்ளது.
6 மாதங்களுக்கு முன்பே அந்த பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், இப்போது தான் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
துண்டு துண்டாக வெட்டப்பட்ட சாரதா! கூலாக சுற்றிய கொலையாளி! பின்னணியில் மற்றொரு பெண்? போலீஸ் அதிரடி
படுகொலை
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சாரதா என்ற பெண்ணுக்கு அப்தாப் அமீன் என்ற இளைஞருடன் டேட்டிங் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி அந்த பெண், அப்தாப் உடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்து உள்ளார். இருவரும் டெல்லியில் வசித்த நிலையில், கடந்த மே மாதம் 18ஆம் தேதி பெண்ணைக் கொன்று உடலை, 35 பீஸாக வெட்டியுள்ளான் அந்த கொடூரன். பின் டெல்லியில் பல்வேறு இடங்களில் அந்த பெண்ணின் சடலத்தைப் போட்டுள்ளான். தனது மகளுடன் பேசவில்லை என்ற போதிலும், சமூக வலைத்தளங்களில் எந்தவொரு போஸ்டும் நீண்ட காலமாகப் போடாததால் சந்தேகமடைந்த அப்பெண்ணின் தந்தை அளித்த புகாரில் தான் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்
அப்தாபை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், அவன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளான். இது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே விசாரணைக்காக இன்று அப்தாப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், போலீஸ் காவலை மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே நீதிமன்றத்தில் அப்தாப் தரப்பில் கூறப்பட்டது என்ன என்பது குறித்த பரபர தகவல்கள் வெளியாகி உள்ளது.
பரபர வாக்குமூலம்
டெல்லி நீதிமன்றத்திலேயே இன்று அப்தாப் தனது காதலியைக் கொன்றதை ஒப்புக் கொண்டான். இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் அப்போது கோபத்தில் ஒரு வேகத்தில் காதலியைக் கொன்றுவிட்டதாக அவன் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளான். மேலும், இப்போது தன்னை பற்றி வெளியாகியுள்ள தகவல்கள் எல்லாமே உண்மையல்ல என்றும் அவன் தெரிவித்துள்ளான். மேலும், விசாரணையில் போலீசாருக்கு ஒத்துழைப்பதாகவும், காதலியின் உடல் உறுப்புகளை வீசிய இடங்கள் குறித்த தகவல்களை போலீசாரிடம் அளித்தாகவும் அவன் தெரிவித்தான்.
நினைவில் இல்லை
அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்த அனைத்து தகவல்களையும் தருவேன் என்றும் இருப்பினும், சம்பவம் நடந்த ஆறு மாதங்கள் ஆகிவிட்டதால் பல விஷயங்களை நினைவுபடுத்த முடியவில்லை என்றும் அவன் தெரிவித்தான். இது தொடர்பாக அப்தாப்பின் வக்கீல் அவினாஷ் கூறுகையில், "போலீசார் கோரிக்கையின் படி காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. போலீசாருக்கு அப்தாப் ஒத்துழைப்பு அளித்து வருகிறார். போலீசாரும் அப்தாப்பை ஒழுங்காக நடத்துகிறார்கள். போலீசாரிடம் இதுவரை அப்தாப் எந்தவொரு பொய்யான தகவலையும் அளிக்கவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
போலீசார்
போலீஸ் விசாரணையில், சாதராவின் உடலை வெட்டப் பயன்படுத்திய ரம்பம் மற்றும் பிளேட்டை வீசிய இடங்கள் குறித்த தகவல்களை போலீசாரிடம் அப்தாப் ஏற்கனவே கூறிவிட்டான். இந்த இடங்களில் சோதனை செய்த போலீசார், சில ஆதாரங்களைச் சேகரித்தனர். அவை மத்திய தடய அறிவியல் ஆய்வகத்திற்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அப்தாப் பயன்படுத்திய ரம்பம், வெட்டும் இயந்திரங்களைக் கண்டறியும் முயற்சியில் இப்போது போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
முக்கிய ஆதாரங்கள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மெஹ்ராலி காட்டில் இருந்து சாரதாவின் சில உடல் பாகங்களை போலீசார் மீட்டனர். இதுவரை மொத்தம் 18 எலும்பு பகுதிகளை போலீசார் மீட்டு உள்ளனர். அது சாதாராவின் உடல் தான் என்பதை உறுதி செய்ய தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அங்கு அவை சாரதாவின் தந்தையின் டிஎன்ஏ மாதிரிகளுடன் சோதனை செய்யப்படும். மேலும், சாரதாவின் உடலை வெட்டப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கூர்மையான வெட்டும் கருவிகளையும் போலீசார் மீட்டனர்.
வரும் நாட்கள்
அதேபோல உடல் பாகங்களைப் போடப் பயன்படுத்தி கருப்பு நிற கவர்களையும் அவர்கள் மீட்டனர். இந்தச் சம்பவத்தில் சாட்சிகள் இல்லை என்பதால் தடயவியல் அறிக்கைகள், சூழ்நிலை ஆதாரங்களே முக்கியமானதாக உள்ளது. இதனால் அவற்றை மிகவும் கவனமாக போலீசார் சேகரித்து வருகின்றனர். இதுவரை சுமார் 80 சதவீத விசாரணை முடிந்துவிட்டதாக டெல்லி போலீசார் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர். முக்கிய ஆதாரங்கள் இல்லை இன்னும் கிடைக்கவில்லை என்பதால் விசாரணையில் அடுத்த சில நாட்கள் ரொம்பவே முக்கியமானதாகும்.