"இது இந்திய மக்கள் எனக்கு கொடுத்தது.." டெல்லி பங்களாவை காலி செய்யும்போது..எமோஷ்னல் ஆன ராகுல் காந்தி
டெல்லி: ராகுல் காந்தி டெல்லியில் இருக்கும் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்துள்ள நிலையில், அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடகாவில் கோலார் என்ற இடத்தில் ராகுல் காந்தி பேசுகையில், மோடி என்று பெயர் வைத்துள்ள அனைவரும் ஒரே மாதிரி இருப்பதாகச் சொல்லி சர்ச்சை கருத்து ஒன்றைத் தெரிவித்தார்.

இது குறித்து பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
ராகுல் காந்தி: இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்துள்ளார். ராகுல் பதவி நீக்கத்திற்கு எதிராகக் காங்கிரஸ் நாடு முழுக்க போராட்டத்தை நடத்தியது. அதேபோல மேல்முறையீடும் செய்தது. மேல்முறையீட்டிலும் ராகுல் காந்திக்கு எதிராகத் தீர்ப்பு வந்த நிலையில், அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளார்.

எம்பி பதவியை இழந்துவிட்டதால், விதிகளின்படி ராகுல் காந்தியால் எம்பிகளுக்கான அரசு பங்களாவில் தொடர்ந்து வசிக்க முடியாது. இதையடுத்து ராகுல் காந்தி வசிக்கும் அரசு பங்களாவை அவர் காலி செய்ய வேண்டும் என்று கடந்த மாதமே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸ் வந்தது முதலே ராகுல் காந்திக்குச் சொந்தமான பொருட்கள் அங்கே இருந்து எடுத்துச் செல்லப்பட்டு வந்தது.
காலி செய்தார்: இன்று, அதாவது ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஏற்கனவே அவருக்குச் சொந்தமான பொருட்கள் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் இன்று தனது வீட்டை காலிசெய்தார். ராகுல் காந்தி துக்ளக் லேனில் உள்ள தனது அதிகாரப்பூர்வ பங்களாவின் சாவியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "இந்திய மக்கள் இந்த வீட்டை 19 ஆண்டுகளாக எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்.. அவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஆனால் அந்த வீடு என்னிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இப்போதெல்லாம் உண்மையைப் பேசுவதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால், அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. உண்மையைப் பேசுவதற்கு நான் எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்" என்றார்
ராகுல் காந்தி 2005இல் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதியில் முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, ராகுல் காந்திக்கு 12 துக்ளக் லேன் பங்களா ஒதுக்கப்பட்டது. கடந்த 19 ஆண்டுகளாகவே ராகுல் காந்தி அங்கேயே தான் வசித்து வந்தார். இந்தச் சூழலில் தான் தகுதி நீக்கம் ஆன பிறகு அந்த பங்களாவை காலி செய்ய 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
எங்கே தங்குவார்: ராகுல் காந்தி இப்போது வீட்டைக் காலி செய்துள்ள நிலையில், அடுத்து அவர் எங்குத் தங்க உள்ளார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நான் முன்னாள் காங்கிரஸ் தலைவரின் (சோனியா காந்தி) 10 ஜன்பத் இல்லத்தில் சிறிது காலம் தங்கியிருப்பேன், அதன் பிறகு என்ன செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்" என்றார்

அதேபோல பிரியங்கா காந்தி கூறுகையில், "எனது சகோதரர் சொல்வது உண்மைதான். அவர் அரசு பற்றி உண்மையைப் பேசினார், அதனால்தான் இவையெல்லாம் நடக்கின்றன. ஆனால் அவர் மிகவும் தைரியமானவர், அவர் ஒருபோதும் பயப்படுவதில்லை. அவர் தனது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பார்" என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "ராகுல் காந்திக்கு வீட்டை விட்டு வெளியேறுவது ஒரு பிரச்சினை அல்ல.. ஆனால் உண்மையைப் பேசியதற்காக ராகுல் காந்தியை மோடி அரசு குறிவைத்துள்ளது அரசியல் பழிவாங்கும் செயல். ஒவ்வொரு இந்தியர்களும் இதை இப்போது பார்த்துக் கொண்டு தான இருக்கிறார்கள். இரண்டு ஆண்டு சிறை, உடனடி தகுதி நீக்கம், உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என வந்த அறிவிப்பை எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications