குமுறிய ஜோதிமணி.. பதறிய கார்த்தி.. கொந்தளித்த ப.சிதம்பரம்.. அத்துமீறிய போலீஸ்.. உஷ்ணத்தில் டெல்லி
காங்கிரஸ் தலைவர்கள் மீதான தாக்குதலுக்கு ப சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்
டெல்லி: காங்கிரஸ் தலைவர்களையும், உறுப்பினர்களையும், வெளியே இழுத்து போட்டு சாலையில் வீசிய டெல்லி போலீசுக்கு மூத்த தலைவர் ப.சிதம்பரம் தன்னுடைய கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 3வது நாளாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆஜரான நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர்.
ட்ரெஸ்ஸை கிழிச்சு.. தண்ணி கூட தரல.. எம்.பிக்கே இந்த கதியா? - டெல்லியில் கொந்தளித்த ஜோதிமணி!
இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக தொடுக்கப்பட்டுள்ளது என்று கூறி, ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எலும்பு முறிவு
இதனால், டெல்லி போலீஸார் அவர்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தியது.. ஆனால், காங்கிரஸோ மேலும் ஆவேசமாகி உள்ளது.. நாங்கள் அமைதியாக போராடும்போது, எங்கள் மீது காவல்துறை அராஜகமாக தாக்குதல் நடத்தி கைது செய்கிறார்கள் என்று கூறி, புகார்களை எழுப்பி வருகின்றனர்... கடந்த 2 நாட்களுக்கு முன்பு, காவல்துறை நடவடிக்கையின்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்துக்கு அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது..
ஜோதிமணி கதறல்
அந்த அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், இன்று நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, டெல்லி போலீசார், தன்னை கிரிமினல் போல கைது செய்து, ஆடையை கிழித்துள்ளதாக புகார் மனு அளித்துள்ளார்... மேலும், கைது செய்யப்பட்டு போலீஸ் ஜீப்பில் கொண்டு செல்லப்பட்டபோது, வீடியோ பதிவு எடுத்து, அதை ஜோதிமணியே வெளியிட்டுள்ளார்.. அத்துடன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இந்த புகாரை அளித்துள்ளார். இதனால், டெல்லி காங்கிரஸே டென்ஷனாக காணப்படுகிறது.
கார்த்தி சிதம்பரம்
மற்றொருபுறம், காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும் காட்சியை காங்கிரஸ் தரப்பே வீடியோ எடுத்துள்ளது.. இந்த வீடியோவை, எம்பி கார்த்தி சிதம்பரம் பகிர்ந்துள்ளார்.. காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து தொண்டர்களை வெளியேற்றுவதன் மூலம், டெல்லி போலீஸார், பாஜகவின் தனியார் ராணுவம் போன்று செயல்படுவதாக தன்னுடைய ட்விட்டர் பதிவில் காரத்தி குறிப்பிட்டுள்ளார்..
ரவுடியிசம்
அதுமட்டுமல்ல, இதே வீடியோவை பகிர்ந்து, பிரதமர் மோடியை சர்வாதிகாரி என்று காங்கிரஸ் தலைமை அலுவலகமும் குற்றம் சாட்டி உள்ளது.. ரவுடியிசம் செய்ய வேண்டும் என்றால் ஜனநாயக அமைப்பு கொடுத்துள்ள நாற்காலியை விட்டு மக்களிடம் வாருங்கள் என்றும் அக்கட்சி தலைமை பதிவிட்டுள்ளது.. இப்படி வீடியோ ஒருபக்கமும், ட்வீட்கள் மறுபக்கமும் பற்றிக் கொண்டு எரியும் நிலையில், மூத்த தலைவர் ப.சிதம்பரமும் நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்..
ப சிதம்பரம்
"இன்று காலை ஏஐசிசி அலுவலகத்தில் போலீசார் செய்தது மூர்க்கத்தனமான செயல்.. சுதந்திரத்தை மீறும் நடவடிக்கை.. காவல்துறையிடம் தேடுதல் உத்தரவும் இல்லை.. கைது வாரண்ட்டும் எதுவும் இல்லை, ஆனால் அவர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்து, எம்பி.க்கள் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை வெளியே இழுத்து சாலையில் வீசியுள்ளனர்.. என்று கடுமையாக கண்டித்துள்ளார்.. அடுத்தடுத்த பரபரப்பு சம்பவங்களால், டெல்லியே உஷ்ணமாகி கொண்டிருக்கிறது..!