"பேரழிவு" நிச்சயம்.. இஸ்ரேல் விவகாரம்.. ஈரான் மட்டும் உள்ளே வந்தால் அவ்வளவுதான்.. புது வார்னிங்
டெல்லி: இஸ்ரேல் ஹமாஸ் மோதல் தொடரும் நிலையில், இது சர்வதேச அளவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து யூரேசியா அமைப்பின் தலைவர் விளக்கியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைக்கு இடையே கடந்த அக். 7ஆம் தேதி ஆரம்பித்த யுத்தம் இரண்டு வாரத்தைத் தாண்டி தொடர்கிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குவதால் அங்கே பதற்றம் நிலவுகிறது.

இதற்கிடையே புகழ்பெற்ற அரசியல் ஆய்வாளரும் யூரேசியா அமைப்பின் நிறுவனருமான இயன் ப்ரெம்மர், இஸ்ரேல் விவகாரம் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் விவகாரம்: இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் வேறு நாடுகளும் உள்ளே வர வாய்ப்புள்ளதாகக் கூறிய இயன் ப்ரெம்மர், இதனால் சண்டை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இயன் ப்ரெம்மர் அளித்த பேட்டியில், இஸ்ரேல் ஹமாஸ் விவகாரத்தில் ஈரான் உள்ளே வந்தால் மத்திய கிழக்குப் பகுதியில் பேரழிவுகரமான மோதல் ஏற்படலாம் என எச்சரித்துள்ளார்.
மேலும், ஹமாஸை விட ராணுவ ரீதியாகத் திறன் கொண்ட ஹிஸ்புல்லா படைகளும் நேரடியாகச் சண்டையில் இறங்க வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். காசா மீதான இஸ்ரேல் முழு வீச்சில் படையெடுப்பு நிச்சயம் நடத்தும் என்றும் அதைத் தவிர்க்கவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்படி எதாவது நடந்தால் அதன் தாக்கம் சர்வதேச அளவில் மோசமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
படையெடுப்பு: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இப்போது நடக்கும் ஏவுகணை தாக்குதலைத் தாண்டி, இஸ்ரேல் நிச்சயம் காசா மீது படையெடுக்கப் போகிறார்கள். இது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ஏராளமான பாலஸ்தீன மக்கள் உயிரிழக்க நேரிடும். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்து முடிந்துவிடும் என்றே நினைக்கிறேன். இது உலகெங்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ள இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரம் 3ஆம் உலகப் போராக மாறலாம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. இதில் ரஷ்யா, சீனா நேரடியாக உள்ளே வராது. இதனால் நிச்சயம் இது 3ஆம் உலகப் போராக மாறாது. அதேநேரம் காசாவிற்குள் இந்தப் பிரச்சினை முடிவடையும் எனச் சிலர் நினைக்கிறார்கள். அதற்கும் நிச்சயம் வாய்ப்பே இல்லை.
மோசமாகும்: ஏற்கனவே அங்குள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் டிரோன் தாக்குதல் நடந்துள்ளது. இஸ்ரேலின் வடக்கு எல்லையை ஹிஸ்புல்லா தாக்க ஆரம்பித்துள்ளது. இந்த சின்ன சின்ன மோதல்கள் எப்போது வேண்டுமானாலும் பெரிய விஷயமாகலாம். மேற்குக் கரையில் இதுவரை பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால், அந்த நிலை சீக்கிரம் மாறவும் வாய்ப்புகள் உள்ளது.
இதை எல்லாம் விட இஸ்ரேல்-காசா விவகாரத்தில் பொருளாதார தாக்கம் முக்கியமானது. ஆனால், ஈரான் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிடாத வரை இதனால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் கச்சா எண்ணெய் தொடங்கி விவசாய பொருட்கள் வரை பல பாதிப்புகள் ஏற்பட்டது. ஆனால், தற்போது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைக்கு மட்டுமே மோதல் இருப்பதால் அந்தளவுக்குப் பாதிப்பு இல்லை. ஆனால், மற்ற நாடுகள் தலையிட்டால் விளைவுகள் மாறக்கூடும்.
அமெரிக்கா: ஆனால், இஸ்ரேல் விவகாரம் அமெரிக்காவிற்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. ரஷ்யா உக்ரைன் விவகாரத்திற்குப் பிறகு பைடன் ஆட்சியில் ஏற்பட்டுள்ள இரண்டாவது முக்கிய விஷயம் இது. அமெரிக்காவில் பல முக்கிய பிரச்சினைகள் இருக்கும் நிலையில், இது கவனத்தைத் திசை திருப்புவதாக இருக்கிறது.
மேலும், தனிப்பட்ட முறையில் பைடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை நம்ப மாட்டார். ஆனால், தற்போதைய நிலையில், அவர்களுக்கு ஆதரவாக நிற்பதைத் தவிர அமெரிக்காவுக்கும் பைடனுக்கும் வேறு வழியில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications