"இன்னும் 10% தான் பாக்கி.. " இந்து ராஷ்டிரம் எப்போது என்ற கேள்விக்கு பிரசாந்த் கிஷோர் பரபர பதில்!
டெல்லி: வலதுசாரிகள் தாங்கள் இந்து ராஷ்டிரம் என்பதை எப்போது தீவிரமாகக் கையில் எடுக்கும்.. அதற்கு இன்னும் எத்தனை காலம் இருக்கிறது என்பது குறித்து பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
இந்துக்களுக்கு எனத் தனியாக ஒரு நாடு அதாவது இந்து ராஷ்டிரம் வேண்டும் என்பதே வலதுசாரிகளின் நோக்கமாக இருக்கிறது. இதைப் பல வலதுசாரி தலைவர்கள் வெளிப்படையாகக் கூறியும் இருக்கிறார்கள்.

இதற்கிடையே நமது நாட்டில் வலதுசாரிகள் முன்னெடுப்பது போல இந்து ராஷ்டிரம் அமைய வாய்ப்பு இருக்கிறதா.. அதற்கு எத்தனை காலம் இருக்கிறது என்பது குறித்து பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விளக்கியுள்ளார்.
பிரசாந்த் கிஷோர்: ஆங்கில ஊடகம் நடத்திய நிகழ்வில் பங்கேற்ற பிரசாந்த் கிஷோர், "இந்து ராஷ்டிரம் நோக்கிய ஒரு பெரிய மாற்றத்தை இந்துக்களிடையே நான் காணவில்லை.. இங்குள்ள அனைவரும் முஸ்லிம்களை வெறுக்க ஆரம்பித்து இந்து ராஷ்டிரம் வேண்டும் என்று சொல்லும் நிலை வந்துள்ளதா எனக் கேட்டால் இல்லை என்பதே அதற்கான பதில்.. கடந்த 30, 40 ஆண்டுகளால் வலதுசாரிகள் இதைத் தீவிரமாக முயன்று வருகிறார்கள். இருப்பினும், குறைந்த அளவு மக்களிடையே தான் அவர்களால் ஆதரவைத் திரட்ட முடிந்துள்ளது. இதற்கு நாம் நினைப்பதை விட அதிக முயற்சியும் நேரமும் தேவை.
இப்போது சுமார் 40% மக்கள் இது குறித்து யோசிக்கலாம். அதேநேரம் இந்த எண்ணிக்கை 55 சதவீதத்தைத் தாண்டினால் சனாதன தர்மம், இந்து ராஷ்டிரம் ஆகியவை குறித்துப் பேச ஆரம்பிப்பார்கள். இந்த விஷயத்தை நீங்கள் கையில் எடுக்கக் குறைந்தபட்சம் 55 முதல் 60 சதவீத இந்துக்கள் ஆதரவு உங்களுக்குத் தேவை, ஏனென்றால் 60 சதவீத இந்துக்கள் பாஜகவுக்கு வாக்களித்தார்கள் என்றால் அது ஒட்டுமொத்த வாக்கு வங்கியில் 48 சதவீதமாக இருக்கும். அதன் பிறகே அவர்களால் இந்து ராஷ்டிரம் குறித்து தீவிரமாகப் பேச முடியும்.
20- 30 ஆண்டுகள்: இப்போது 40% மக்கள் இதை நினைத்தாலும் இதை 55%ஆக உயர்த்துவது ரொம்பவே கடினம். அதற்கு 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஆகலாம். அதேநேரம் இதற்கு எதிராகப் பிரச்சாரத்தை ஆரம்பித்தால் அது மேலும் தாமதம் தான் ஆகும்.
கடந்த 50 ஆண்டுகளாக வலதுசாரிகள் தீவிர முயற்சி எடுத்தும் இந்த நிலைக்குத் தான் வந்துள்ளது. இதை நான் மக்களை எதிர் எதிராகத் திருப்புவது எனச் சொல்ல மாட்டேன். இந்துக்கள் அனைவரும் ஒன்றாகத் திரள வேண்டும் எனச் சொல்லி அவர்கள் இதைச் செய்கிறார்கள். இருப்பினும், அதிலும் அவர்களால் இன்னும் 50% கூட தாண்ட முடியவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள்: தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தடுமாற என்ன காரணம் என்பது குறித்துப் பேசிய அவர், "எதிர்க்கட்சிகளின் மதச்சார்பற்ற நிலைப்பாடு குறித்து பாஜக விமர்சிப்பது தெரியும். ஆனால், இந்த மதச்சார்பற்ற நிலைப்பாடு காரணமாக எதிர்க்கட்சிகள் தோற்பதில்லை. அவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்யாமல் சோம்பேறித்தனமாக இருப்பதே தோல்விக்குக் காரணம்..
பொதுத்தேர்தலுக்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பு தான் அவர்கள் இந்தியக் கூட்டணியை உருவாக்கினீர்கள். அவர்கள் ஏன் இதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே செய்யவில்லை. பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு ஏன் இதைச் செய்யவில்லை. அப்போதே ஆரம்பித்து இருந்தால் எல்லா பிரச்சினைகளையும் பேசி தீர்க்க நேரம் இருந்து இருக்கும்.
அதைக் கூட விட்டுவிடலாம். இந்தியா கூட்டணி கடந்த 2023 ஜூன் மாதம் முதல் கூட்டத்தை நடத்தினார்கள். அதன் பிறகு ஒரு முறையாவது மக்களிடையே கூட்டத்தை நடத்தினார்களா, இவர்கள் மொத்தமாக ஆறே ஆறு முறை தான் ஆலோசனை நடத்தி இருந்தனர். இப்படி எல்லாம் இருந்தால் எப்படி வெல்ல முடியும்.












Click it and Unblock the Notifications