குரங்கு அம்மை அச்சுறுத்தல்.. பெருந்தொற்றாக மாறுமா? உலக சுகாதார அமைப்பு விளக்கம்
டெல்லி: ஆப்பிரிக்க நாடுகளை குரங்கு அம்மை நோய் அதிதீவிரமாக அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், இது கொரோனா தொற்று போல பெருந்தொற்றாக மாறுமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று 2019 ஆம் ஆண்டு பரவ தொடங்கி நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் ஓய்ந்த நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை சுமார் 450க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 32 பரிசோதனை மையங்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நோயின் அறிகுறிகள்: உடல் பலவீனம், வீங்கிய நிணநீர் முனைகள், தொண்டை புண், சொறி, காய்ச்சல், தசை வலி, முதுகு வலி ஆகியன குரங்கு அம்மையின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே உடலில் தென்படத் தொடங்கிவிடும். குறிப்பாக காய்ச்சல், தொண்டை புண், தலைவலி முதலிலேயே தென்படத் தொடங்கிவிடும்
குரங்கு அம்மை நோய் பரவுமா?: தொற்று பரவியவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதன் மூலம் இந்நோய் பரவும் என்று உலக சுகாதா அமைப்பு தெரிவித்துள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு இந்த தொற்று தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இந்த நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அந்த நோயாளியை தனிமைப்படுத்த வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்ட உடனே முறையான சிகிச்சை பெறுவதன் மூலம் 4 வாரங்களில் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு விட முடியும் என்று சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குரங்கு அம்மை நோய் புதிய கொரோனா பெருந்தொற்றாக மாறுமா, மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா என்பது போன்ற கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குநர் ஹன்ஸ் க்ளூஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய் புதிய வகை கொரோனா தொற்று இல்லை. இதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறை அதிகாரிகளுக்குத் தெரியும். கொரோனாவை போல பெருந்தொற்றாக குரங்கு அம்மை நோய் மாறாது. இந்நோயை நம்மால் சமாளிக்க முடியும்.
இதன் பரவல் கட்டுப்படுத்தக் கூடியதுதான். நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றி நோய் பரவலை தடுக்கப் போகிறோமா அல்லது இதனைப் புறக்கணித்து சிக்கப் போகிறோமா என்பது இந்த நோயை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதில்தான் இந்நோயில் இருந்து மீள்வதற்கான வழி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications