"சீக்ரெட் சூப்பர் ஸ்டார்!" ஜியோஹாட்ஸ்டார் விவகாரம்! அம்பானிக்கு தலைவலி தரும் இளைஞர் இவர்தான்! பேட்டி
டெல்லி: ஜியோஹாட்ஸ்டார் என்ற டொமைனை பதிவு செய்த இளைஞர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ரிலையன்ஸ் மிரட்டுவதாக அவரே தனது இணையதளத்தில் கூறியது நேற்று பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே அந்த நபர் பிரபல ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பல விரிவான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் உள்ள பிரபல ஸ்டிரீமிங் நிறுவனங்களான ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் ஒன்றாக இணைந்தன. இந்த நிறுவனங்கள் ஒன்றாக இணையும் பேச்சு அடிப்பட்ட போதே டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஜியோஹாட்ஸ்டார் டாட் காம் என்ற டொமைனை வாங்கியிருக்கிறார்.

ஜியோ மறுப்பு: இப்போது அந்த டொமைனை விற்கத் தயாராக இருப்பதாகவும் அதற்குப் பதிலாகக் கல்லூரி கட்டணமான ஒரு கோடி ரூபாயை ஜியோ நிறுவனம் தனக்கு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், அதை ஜியோ ஏற்க மறுத்ததாகத் தெரிகிறது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து அந்த நபர் பிரபல ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்.
யார் அந்த இளைஞர்: அதில் அவர், "நான் ஏன் எனது அடையாளத்தை முழுமையாக வெளிப்படுத்த மறுக்கிறேன் என்பது உங்களுக்கே தெரியும். நான் டெல்லியில் வசிக்கும் 28 வயது நடுத்தர வர்க்க இளைஞன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கு தான். என் அப்பா அரசு ஊழியர், அம்மா இல்லத்தரசி. அல்காரிதம் அடிப்படையில் மக்களுக்கு அவர்கள் விரும்பிய படங்களைப் பரிந்துரைக்கும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள் இருக்கிறது.
நான் ஜியோஹாட்ஸ்டார் என்ற பெயரில் இணையதள டொமைனை மட்டுமே வாங்கி இருக்கிறேன். சமூக வலைத்தளங்களிலும் சிலர் இந்த பெயரில் கணக்கு தொடங்கியுள்ளதை அறிய முடிகிறது. ஆனால், அது நான் இல்லை.. என்னை போலவே சிலர் என்ன நடக்கும் என்பதை யூகித்துள்ளனர் போல" என்றார்.
படித்தது என்ன: நீங்கள் கம்யூட்டர் இன்ஜினியரா என்ற கேள்விக்கு அவர், "நான் ஒரு தொழில்முனைவோர்.. எனக்கு தொழில்நுட்பத்திலும் ஆர்வம் இருக்கிறது.. அப்படி சொல்லலாம். நான் டெல்லி-என்.சி.ஆரில் உள்ள ஒரு கல்லூரியில் ஐடி பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றேன்.. பிறகு உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றேன்.
இந்த இரண்டும் தான் இப்போது நான் நடத்தும் ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு உதவி இருக்கிறது. எனது அல்காரிதம் உங்கள் கேரக்டர் அடிப்படையில் உங்களுக்குப் பிடித்த படங்களைப் பரிந்துரைக்கும். சில நிதி சிக்கல் காரணமாக அந்த செயலியை என்னால் பெரியளவில் கொண்டு செல்ல முடியவில்லை. ஆனால், அந்த செயலி எனக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒரு குறுகிய கால கோர்ஸ் படிக்க உதவியது.
இது 2021ல் நடந்தது. அந்த கோர்ஸுக்கு நான் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருக்க வேண்டியது. இருப்பினும், சரியாக அந்த நேரத்தில் பெருந்தொற்று வந்துவிட்டது. இதனால் அதை ஆன்லைன் கோர்ஸாக மாற்றினர். இதனால் அங்குச் செல்ல முடியவில்லை. கோர்ஸ் முடிந்ததும் சும்மா ஒரு முறை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று வந்தேன்" என்றார்.
ஜியோஹாட்ஸ்டார்: ஜியோஹாட்ஸ்டார் விவகாரம் குறித்த கேள்விக்கு அவர், "ரிலையன்ஸ் என்ற கார்பரேட் நிறுவனம் முன்பு நான் சின்ன ஆள்.. ஒரு பைசா கூட எனக்குக் கொடுக்காமல் அவர்களால் டொமைனை பறிக்க முடியும். அவர்களின் செல்வாக்கு மற்றும் சட்ட பலம் குறித்து எனக்குத் தெரியும். ஆனால், அதை அவர்கள் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
மேலும், நான் எந்த தவறும் செய்யவில்லை.. சட்ட விரோத செயலிலும் ஈடுபடவில்லை.. ஜியோ ஒரு பிராண்ட், ஹாட்ஸ்டார் ஒரு பிராண்ட்.. ஆனால் ஜியோஹாட்ஸ்டார் என்பது இன்றுவரை சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் இல்லை. இதன் காரணமாகவே நான் 2023ல் அந்த டொமைனை வாங்கினேன். ஜியோ ஹாட்ஸ்டார் இணைப்பு குறித்த செய்தி கிடைத்தவுடன் அதை நான் வாங்கினேன். அதற்கு எனக்கு ரூ.5000க்கு கீழ் தான் செலவானது. இதன் மூலம் எனது கேம்பிரிட்ஜ் கனவு நிறைவேறும் என நம்புகிறேன்.
பின்னணியில் என்ன நடந்தது: இது பொதுவெளியில் போடும் முன்பே தனிப்பட்ட முறையில் பல முறை அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினேன். இருப்பினும், அவர்கள் தரப்பில் எந்தவொரு பதிலும் இல்லை. கடந்த மார்ச் மாதம் ஜியோஹாட்ஸ்டார் டாட் இன் என்ற டொமைனை அவர்கள் பதிவு செய்தார்கள். அதைத் தொடர்ந்தே நான் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அதற்கு எந்தவொரு பதிலும் கிடைக்காததால் நான் பொதுவெளியில் இதை அறிவிக்க வேண்டிய நிலை உருவானது.
அதன் பிறகு சமீபத்தில் ரிலையன்ஸ் தரப்பில் பேசினார்கள். டொமைனை பதிவு செய்ய ஆன கட்டணத்தை மட்டுமே தருவோம் என்றார்கள். நான் கேட்ட தொகையைத் தரச் சம்மதிக்கவில்லை. ஆகாஷ் அம்பானி திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட வாட்ச் பரிசை விட நான் கேட்கும் தொகை சிறியது. அவர்களுக்கு இது பெரிய தொகையே இல்லை. ஆனால், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றும் மிரட்டுகிறார்கள். நான் கடைசி பதிவில் சட்ட உதவி கேட்டிருந்தேன். அதற்கும் பலரும் உதவுவதாகச் சொன்னார்கள். அதற்கு நன்றி.. ஆனால், சட்ட நடவடிக்கையில் இறங்க எனக்கு ஆர்வம் இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications