ராஜ்யசபாவில் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்.. எழுந்துபோகும் போது மோடி சொன்ன வார்த்தை இருக்கே!
டெல்லி: பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த வேளையில் எதிர்க்கட்சியினரை பார்த்து பிரதமர் மோடியை கூறிய வார்த்தை அதிக கவனம் பெற்றது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார். இந்த முறை தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் கூட கூட்டணி கட்சி எம்பிக்களுடன் உதவியுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில் தான் புதிதாக தேர்வான எம்பிக்கள் லோக்சபாவில் பதவியேற்றனர். அதன்பிறகு சபாநாயகர் தேர்தல் நடத்தி ஓம்பிர்லா வெற்றி பெற்றார். அதன்பிறகு கடந்த 27 ம் தேதி லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் மத்தியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார்.
இதையடுத்து லோக்சபா, ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதையடுத்து நேற்று லோக்சபாவில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார். அதன்பிறகு லோக்சபா நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பதில் உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியில் உள்ள எனது நண்பர்களுக்கு நன்றி. 1/3 அரசாங்கம் என்று காங்கிரஸ் கட்சியின் கூறியது சரிதான். நாங்கள் ஏற்கனவே 10 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளோம். இன்னும் 20 ஆண்டுகள் நாங்கள் ஆட்சி அமைப்போம். இதனை உறுதியாக நம்புகிறேன்.
அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது. நான் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன். என் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கூட பஞ்சாயத்து தலைவர் ஆனது இல்லை. ஆனால் இன்று பல்வேறு பெரிய பெரிய பதவிகளில் இருந்து நாட்டுக்கு சேவையாற்றி வருகிறேன். இதற்கு காரணம் பாபாசாகேப் அம்பேத்கர் அளித்துள்ள அரசியலமைப்பு சட்டம் தான் காரணம்.
கடந்த 10 ஆண்டுகள் நாங்கள் செய்தது எல்லாம் வெறும் பசியை தூண்டும் செயல் தான். பிரதான உணவு என்பது இனிதான் வர உள்ளது. அடுத்து வரும் 5 ஆண்டுகள் எங்களின் போராட்டம் என்பது ஏழ்மையை அகற்றும் வகையில் இருக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் அரசு நிர்வாகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வோம்'' என்றார்.
இந்த வேளையில் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி தலைரவாக உள்ள மல்லிகார்ஜுன கார்கேவை பேச அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். ஆனால் பிரதமர் மோடி அதனை கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து பேசினார். இதையடுத்து பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த வேளையில் பிரதமர் மோடி வெளிநடப்பு செய்த எம்பிக்களை பார்த்து, ‛‛பொய்யை பரப்புவோருக்கு உண்மையை கேட்கும் சக்தி இல்லை. உண்மையை கேட்க விரும்பாமல் வெளிநடப்பு செய்வோர் ராஜ்யசபாவை அவமதிக்கின்றனர்'' எனக்கூறினார். ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரதமர் மோடியின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து வெளியேறினர். அதன்பிறகும் பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications