கடைசி நேரத்தில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பாக்.! அபிநந்தன் இந்திய வருகை தாமதமான பின்னணி
Recommended Video

டெல்லி: இந்திய விங் கமாண்டர் அபிநந்தன், நான்கு மணிநேர கால தாமதத்திற்குப் பிறகு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதற்கான, பின்னணி காரணம் குறித்து தற்போது தகவல் வெளிவந்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் அரசின் ஒரு திரைமறைவு செயல் இதன் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
அமைதி முயற்சியாக, அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். ஆனால், உள்ளுக்குள் அந்த நாட்டு அரசுக்கு வேறு ஒரு திட்டமும் இருந்துள்ளது. கடைசி நேரத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் அதை எடுத்துக் காட்டுவதாக உள்ளன.

பகடைக்காய்
சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் இமேஜை உயர்த்துவதற்காக, அபிநந்தனை, பகடைக்காயாக பயன்படுத்தி உள்ளதாகவே தெரிகிறது. வெள்ளிக்கிழமை மாலை 5.20 மணிக்கு வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்ட அபிநந்தன், அதன் பிறகு இரவு 9.20 மணிக்குதான் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தான் பாகிஸ்தானின் ஒரு விளையாட்டு நடந்துள்ளது.

கட்டாய வீடியோ
அபிநந்தனை வாகா எல்லைக்கு அழைத்து வருவதற்கு முன்பாக, அவரிடம், வீடியோ கேமரா முன்னிலையில், பாகிஸ்தான் ராணுவம் குறித்து பெருமையாக பேசும்படி கட்டாயப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மிகச் சிறப்பாக பாகிஸ்தான் ராணுவம் தன்னை கவனித்துக் கொண்டதாக பேசுமாறு வீடியோ பதிவு ஒன்றை எடுத்துள்ளனர்.

அரசு, மீடியாவுக்கு எதிராக
மேலும் இந்திய அரசை தாக்கிப் பேச வேண்டும் என்றும், இந்திய மீடியாக்கள்தான் பாகிஸ்தானுக்கு எதிராக வன்மத்தை பரப்புகின்றன என்று சொல்லவேண்டும் என்றும் அவர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு அபிநந்தன் மறுத்துள்ளார். அபிநந்தனுக்கு விடுதலை பற்றிய தகவல் தெரியாது என கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய உள்ள போர்க் கைதி என்ற மனநிலையில்தான் இருந்துள்ளார். எனவே, பாகிஸ்தான் ராணுவம் அவரிடம், தங்களைப் பற்றி புகழ்ச்சியாக சொல்லச் சொல்லி உள்ளதால் வேறு வழியில்லாமல் சில வார்த்தைகளை கூறியதாக தெரிகிறது.

மறுத்த மாவீரன்
சுமார் 90 விநாடிகள் கொண்ட வீடியோவை இதற்காக பாகிஸ்தான் தயாரித்துள்ளது. ஆனால் அபிநந்தன் சரியாக ஒத்துழைக்காத காரணத்தினால் 17 முறை அந்த வீடியோ கட் செய்யப்பட்டு பிறகு எடிட் செய்யப்பட்டு உள்ளது. வீடியோவிற்கு ஒத்துழைக்குமாறு, அபிநந்தன் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தால் வலியுறுத்தப்பட்டும் முழுமையாக அந்த முயற்சி பலிக்கவில்லை.

டிவி சேனல்களுக்கு கொடுத்தனர்
இந்த வீடியோ வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் பாகிஸ்தான் மீடியாக்களுக்கு பகிரப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இரவு ஒன்பது மணி என்பது டிவி சேனல்களின் பிரைம் டைம் ஆகும். அந்த நேரத்தில் இந்த வீடியோவை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உத்தரவிட்ட பாகிஸ்தான் அரசு, அதன் பிறகு அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இதன் மூலம் திரைக்குப் பின்னணியில் ஒரு விளையாட்டை பாகிஸ்தான் அரங்கேற்றியுள்ளது.












Click it and Unblock the Notifications