"ஷிப்ட் ஓவர்!" இனி விமானத்தை ஓட்ட மாட்டேன்.. பாதி வழியில் சம்பவம் செய்த பைலட்.. மிரண்டுபோன பயணிகள்
டெல்லி: லண்டனில் இருந்து டெல்லி வந்து ஏர் இந்தியா விமானத்தை நடுவழியில் விமானி இயக்க மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் பெரிய சிரமத்தை எதிர்கொண்டனர்.
பொதுவாக ஒருவருக்கு ஷிப்ட் முடிந்துவிட்டால் அவர்கள் வீட்டுக்குக் கிளம்பிவிடலாம் தான். ஆனால், சில குறிப்பிட்ட பணிகளில் ஒருவர் தங்கள் வேலைகளை முடிக்கும் வரை ஷிப்ட் முடிந்தாலும் வேலை செய்ய வேண்டும்,
அதற்குப் பதில் ஷிப்ட் முடிந்துவிட்டது என்று பாதியிலேயே கிளம்பினால் அது பெரும் பாதிப்பைத் தான் ஏற்படுத்தும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது ஏர் இந்தியா விமானத்தில் நடந்துள்ளது.

விமானம்: ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான விமானம் லண்டனில் இருந்து சனிக்கிழமை வழக்கம் போலக் கிளம்பியது. AI-112 என்ற இந்த விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு டெல்லிக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும். இருப்பினும், அப்போது டெல்லியில் மோசமான வானிலை நிலவியது. இதனால் முதலில் 10 நிமிடங்கள் டெல்லி ஏர்போர்ட் அருகே வட்டமிட்ட விமானம், பின்பு ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டது. ஏர் இந்தியாவின் இந்த விமானமும் ஜெய்ப்பூரில் தரையிறங்கியது.
சில மணி நேரத்தில் டெல்லியில் வானிலை சீரான நிலையில், விமானம் மீண்டும் டெல்லிக்கு வர அனுமதி தரப்பட்டது. இருப்பினும், தங்களின் ஷிப்ட் முடிந்துவிட்டதாகச் சொல்லி பைலட்கள், விமானத்தை இயக்க மறுத்துள்ளனர். இது பயணிகளை கடும் அவதிக்குள் தள்ளியுள்ளது. அங்கிருந்த பயணிகள் அனைவரும் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், விமானத்தை ஜெய்ப்பூரில் இருந்து எடுக்க விமானி மறுத்துவிட்டார்.
பயணிகள் தவிப்பு: ஏர் இந்தியா சார்பிலும் பயணிகளுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். விமானத்தில் பயணித்த ஆதித் என்ற பயணி ஒருவர், சிவில் விமானத்துறை அமைச்சர், ஏர் இந்தியாவை டேக் செய்து தனது ட்விட்டரில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமம் குறித்த தகவல்களைப் பகிர்ந்திருந்தார். இது உடனடியாக இணையத்தில் டிரெண்டானது.
இந்த ட்வீட்டிற்குப் பதிலளித்த ஏர் இந்தியா நிர்வாகம், பயணிகளின் சிரமத்தைக் குறைக்க தங்களால் முடிந்தவரை முயன்று வருவதாக பதிலளித்துள்ளனர். இருப்பினும், ஜெய்ப்பூரில் சிக்கிய பயணிகளுக்கு சுமார் 3 மணி நேரம் எந்தவொரு உதவியும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அங்குள்ள பயணிகள் என்ன செய்வது என்றே புரியாமல் திணறியுள்ளனர். ஒரு சில பயணிகள் சாலை மார்க்கமாக டெல்லி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

என்ன நடந்தது: இது குறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். விமானிகள் தொடர்ச்சியாகக் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் விமானத்தை இயக்கக் கூடாது என்று விதி இருப்பதாலேயே பைலட்கள் விமானத்தை இயக்குவதைத் தவிர்த்துள்ளனர். இருப்பினும், உடனடியாக புதிய குழு ஏற்பாடு செய்யப்பட்டு, விமானம் ஜெய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு இயக்கப்பட்டது" என்றார்,
அதன்படி சில பயணிகள் சாலை மூலம் டெல்லிக்கு வர ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், மற்ற பயணிகள் மாற்றுக் குழு ரெடி செய்யப்பட்டு அதே விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இருப்பினும், ஷிப்ட் முடிந்துவிட்டதால் பைலட் விமானத்தை இயக்க மறுத்தது சலசலப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications