Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.48.. இதுதான் இன்றைய விலையாக இருந்திருக்க வேண்டும்! அடித்து சொல்லும் கார்கே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை? என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். மட்டுமல்லாது இன்றைய கச்சா எண்ணெய் விலையை ஒப்பிடும்போது, பெட்ரோல் ரூ.48க்குதான் விற்கப்பட வேண்டும் என்றும் கார்கே கூறியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, “கச்சா எண்ணெய் விலை 32.5 சதவீதம் குறைந்துள்ளது, ஆனாலும் பாஜகவின் எரிபொருள் கொள்ளை தொடர்கிறது. இதற்காக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜக தோற்கடிக்கப்படும்.

mallikarjun kharge petrol diesel

கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி நிலவரப்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.51க்கு விற்பனையானது. டீசல், ரூ.57.28க்கு விற்பனை ஆனது. அப்போது கச்சா எண்ணெயில் ஒரு பேரல் 107.49 அமெரிக்க டாலருக்கு விறக்கப்பட்டது.

இதே இன்றைய நிலவரப்படி கச்சா எண்ணெய் ஒரு பேரல் 72.48 அமெரிக்க டாலராக குறைந்திருக்கிறது. ஆனால் டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 94.72க்கும், டீசல் ரூ. 87.62க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நியாயமாக பார்த்தால்.. கச்சா எண்ணெய் விலை சரிவை கணக்கில் கொண்டு இன்று பெட்ரோல் ரூ.48.27க்கும், டீசல் 69.00க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் எரிபொருளுக்கு வரி விதித்ததன் மூலம் ரூ. 35 லட்சம் கோடியை மத்திய அரசு கொள்ளை அடித்திருக்கிறது” என்று விமர்சித்திருக்கிறார்.

கச்சா எண்ணெய்: பூமியில் பல லட்சம் ஆண்டுகளாக உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்படியான உயிரினங்கள் பாறை மற்றும் வண்டல் அடுக்குகளின் கீழ் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு புதைந்துபோயின. விலங்குகள், தாவரங்கள் என புதைந்துபோனவை எல்லாம், வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக கெரோஜன் எனப்படும் மெழுகு, கரிமப் பொருளாக மாற்றுகிறது. இறுதியில் இது கச்சா எண்ணெய்யாக மாறுகிறது.

இதை தோண்டி எடுத்து இதிலிருந்து பெட்ரோல், டீசல், விமானத்திற்கான எரிபொருள், மண்ணெண்ணெய், லூப்ரிகண்டுகள், பெட்ரோ கெமிக்கல்ஸ் போன்றவை பிரித்தெடுக்கப்படுகிறது.

இந்தியாவின் தேவை: இந்தியாவை பொறுத்தவரை அதிக மக்கள் தொகை இருப்பதாலும், சொந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், பெட்ரோல், டீசலின் தேவை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஒரு நாளைக்கு 18-20 மில்லியன் லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. இதில் 40-50% இருசக்கர வாகனங்களுக்கும், 30-40% பயணிகள் வாகனங்களுக்கும், 10-20% வணிக வாகனங்களுக்கும், 5-10% விமானங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இதே டீசலை எடுத்துக்கொண்டால், தோராயமாக ஒரு நாளைக்கு 48-52 மில்லியன் லிட்டர் தேவைப்படுகிறது. இதில், வணிக வாகனங்களுக்கு 50-60%, தொழில்துறை மற்றும் உற்பத்தி துறைக்கு 20-30%, விவசாயத்திற்கு 10-20%, பணிகள் வாகனங்களுக்கு 5-10% தேவை இருக்கிறது.

எவ்வளவு வாங்கப்படுகிறது: இந்தியாவுக்கு தேவையான எரிபொருள் கச்சா எண்ணெய்யாக கொள்முதல் செய்யப்படுகிறது. இதனை வாங்கி, அதிலிருந்து மேற்குறிப்பிட்ட எரிபொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் அரபு நாடுகளிலிருந்துதான் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இப்போது ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு பேரல் ஒன்றுக்கு சுமாராக 20 அமெரிக்க டாலர்கள் லாபமாக கிடைக்கிறது. மட்டுமல்லாது, இந்த வர்த்தகம் முழுக்க முழுக்க ரூபாய்-ரூபிள் முறையில் நடைபெறுகிறது.

சிக்கல் இதுதான்: இப்படி லாபம் வந்தும் கூட ஏன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளைவிட இன்றைய தேதியில் கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் கீழ் குறைந்திருக்கிறது. அப்படி எனில், பெட்ரோல், டீசல் விலையையும் குறைக்க வேண்டும்தானே? இதை ஏன் செய்யவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

வரி: பெட்ரோல், டீசலுக்கு மத்திய மாநில அரசுகள் வரியை விதிக்கின்றன. இதில், மத்திய அரசு சமீபத்தில் கூடுதல் வரியை விதித்திருந்தது. கடந்த 2014-2015 முதல் 2023-2024 வரையிலான 9 ஆண்டுகளில் இந்த கூடுதல் வரி மூலம் அரசுக்கு, ரூ.28.33 லட்சம் கோடி வருவாய் கிடைத்திருக்கிறது.

இந்தியாவில் அதிக பணம் கொண்டவர்களுக்கான கார்ப்பரேட் வரியை கடந்த 2019ம் ஆண்டு 30%லிருந்து 25% மற்றும் 22% ஆக குறைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.1.84 லட்சம் கோடி ஆண்டுக்கு இழப்பு ஏற்படும் என்று சொல்லப்பட்டது.

ஒருபுறம் பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் வரி வருவாய், மறுபுறம் கார்ப்பரேட் வரி இழப்பு ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்தால், விஷயம் என்னவென புரிந்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளன.

எண்ணெய் நிறுவனங்கள்: தொடக்கத்தில் எண்ணெய் விலையை மத்திய அரசே நிர்ணயித்து வந்தது. இடையில் இந்த விலை நிர்ணயம் எண்ணெய் நிறுவனங்கள் கையில் ஒப்படைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் கடந்த 2014ம் ஆண்டு விலை நிர்ணயம் முழுக்க முழுக்க, எண்ணெய் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன. இதுதான் இன்றைய விலை உயர்வுக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+