ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ நீதிமன்றம் ப சிதம்பரத்துக்கு 5 நாள்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அவருக்கு ஜாமின் வழங்கவும் மறுத்துவிட்டது. இதற்கு சிபிஐயின் இந்த வாதங்கள்தான் காரணமாக அமைந்து விட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் புதன்கிழமை இரவு சிபிஐ அதிகாரிகளால் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது ப. சிதம்பரத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகினர். சிபிஐ தரப்பில் சொலிஸ்டர் ஜெனரல் துஷர் மேத்தா ஆஜரானார்.
சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷர் மேத்தா, ப சிதம்பரத்தை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு வாதிட்டார். அப்போது அவர் கூறுகையில், "எங்கள் விசாரணைக்கு ப. சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை. அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. எங்களின் எந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதில் அளிக்கவில்லை. அவர் எங்களிடம் எதுவுமே பேசவில்லை. பேசாமல் இருப்பது அடிப்படை சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் அவர் வழக்கு விசாரணைக்கு எதிராக செயல்படுகிறார்.
சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரித்தால்தான் வழக்கில் முன்னேற்றம் ஏற்படும். ஐஎன்எக்ஸ் கூட்டு சதியில் ப.சிதம்பரத்திற்கு பங்கு உண்டு" என்றார். இதேபோல் அபிஷேக் சிங்வின் வாதத்தின்போது மீண்டும் குறுக்கிட்டு வாதாடிய சிபிஐ வழக்கறிஞர், ப. சிதம்பரத்தை கண்டிப்பாக காவலில் எடுக்க வேண்டும்.முன்னாள் அமைச்சர் என்பதற்காக சலுகை தர கூடாது என்றார்.
இப்படி ப சிதம்பரம் மற்றும் சிபிஐ தரப்பு வழக்கறிஞர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் நடத்திய விவாதங்களுக்கு பிறகு வழக்கின் தீர்ப்பை சில மணி துளிகள் ஒத்திவைத்தார் நீதிபதி. பின்னர் சிபிஐயின் கோரிக்கையை ஏற்று ப சிதம்பரத்தை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்தார். வருகிற 26ம் தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உள்ளார். வரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் சிதம்பரத்தை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.