விமானங்கள் எப்போதும் ஏன் வெள்ளை கலரிலேயே இருக்கு.. இதுக்கு பின்னாடி இவ்வளவு காரணங்கள் இருக்கா!
டெல்லி: நீங்கள் ஒரு விஷயத்தைக் கவனித்து இருக்கிறீர்களா.. நமது நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி இயக்கப்படும் பெரும்பாலான பயணிகள் விமானம் வெள்ளை கலரிலேயே பெயிண்ட் அடிக்கப்பட்டு இருக்கும். சில நிறுவனங்கள் வேறு கலரை யூஸ் செய்தாலும் அவை குறைவாகவே இருக்கும். எப்போதும் பிரதான நிறமாக வெள்ளை கலரே இருக்கும். அதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது யோசித்து இருக்கிறார்களா.. வாங்க அது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் இப்போது விமானங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மெட்ரோ நகரங்கள் மட்டுமின்றி இரண்டாம் கட்ட நகரங்களில் கூட விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வெள்ளை கலர்: இதனால் நமது நாட்டில் விமானங்களின் தேவையும் பல மடங்கு அதிகரித்து வருகிறது. தற்போது நாட்டின் மிகப் பெரிய விமான நிறுவனமாக இண்டிகோ இருக்கிறது. அவர்களுக்கு கடும் போட்டியைத் தர ரத்தன் டாடாவின் ஏர் இந்தியா தயாராகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க பெரும்பாலும் நமது நாட்டில் விமானங்கள் எப்போதும் ஏன் வெள்ளை நிறத்திலேயே இருக்கிறது என்று எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா.. அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முதன்மையாக வெள்ளை கலர் என்பது சூரிய ஒளியை மற்ற கலர்களை விட அதிகமாகவே பிரதிபலிக்கிறது. இது வெப்பமான காலகட்டத்திலும் விமானத்தைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், சூரியனின் வெப்பத்தால் ஏற்படும் சேதத்திலிருந்து வெளிப்புறத்தைப் பாதுகாக்கிறது.
என்ன காரணம்: இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அதாவது விமானம் என்பது பல நூறு பேரின் உயிர் சம்பந்தமான விஷயம். நடுவானில் விமானங்கள் பறக்கும் போது ஏதாவது பிரச்சினை கண்டறியப்பட்டால் எதுவும் செய்ய முடியாது. மிகப் பெரிய விபத்து ஏற்படும். இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை விமானங்களை செக் செய்வார்கள். அப்படி நடக்கும் வழக்கமான பராமரிப்பு சோதனைகளின் போது விரிசல் அல்லது சேதத்தை எளிதாகக் கண்டறிய இந்த வெள்ளை நிறம் உதவுகிறது.
மேலும், மற்ற கலர் அடிக்கும் போது அதன் செலவுகள் அதிகரிக்கும். ஆனால், வெள்ளை கலரை அடிக்கும் போது செலவுகள் குறையும். விமானத்திற்குப் பிரத்தியேகமாகப் பயன்படுத்தும் பெயிண்ட் விலை அதிகம். சராசரியாக ஒரு போயிங்க் 737 விமானத்திற்கு பெயிண்ட் அடிக்க 240 முதல் 260 லிட்டர் வரையிலான பெயிண்ட் தேவைப்படும். மேலும், குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மீண்டும் மீண்டும் பெயிண்ட் அடிக்க வேண்டும். இதன் காரணமாக வெள்ளை கலரை பயன்படுத்தினால் கணிசமான தொகை மிச்சப்படுத்தலாம் அதேபோல வெள்ளை கலர் என்பதால் விமானத்தில் லோகோவும் கூட மிகத் தெளிவாகத் தெரியும்.
வல்லுநர்கள் சொல்வது என்ன: இது தொடர்பாக வல்லுநர்கள் மேலும் கூறுகையில், "ஹெலிகாப்டர்கள் பொதுவாக விஷுவல் ஃப்ளைட் விதிகளின் கீழ் இயங்கும். இதனால் அவை சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் போன்ற பிரகாசமான வண்ணங்களில் பூசப்படும். அதேநேரம் விமானங்கள் பொதுவாக இன்ஸ்ட்ரூமென்ட் ஃப்ளைட் விதிகளின் கீழ் இயக்கப்படும்.. அதாவது பெரும்பாலும் ரேடார் மூலமே கண்காணிக்கப்படும். இதனால் பறக்கும் போது பிரகாசமான கலர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனாலேயே பலரும் வெள்ளை நிறத்தைத் தேர்வு செய்கிறார்கள்" என்றார்.
அதாவது விமானம் ரேடார் மூலமே கண்காணிக்கப்படும் என்பதால் பறக்கும் போது அதை எளிதாக அடையாளம் காண வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இதனால் செலவு குறைவு, சூரிய ஒளியைப் பிரதிபலிப்பது, எளிதாக விரிசல்களை அடையாளம் காண உதவுவது உள்ளிட்ட காரணங்களுக்காக விமானங்களில் வெள்ளை கலரை பயன்படுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications