'வாடிக்கையாளரே' இல்லாத நிலையில் மத்திய அரசின் SECI ஏன் அதானிக்கு ஒப்பந்தம் தந்தது? புரியாத புதிர்!
டெல்லி: அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் இந்திய தொழிலதிபர் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட விவகாரத்தில் பல்வேறு அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் இருக்கின்றன. அதானி மீதான குற்றப்பத்திரிகையில் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிஷா, ஜம்மு காஷ்மீர் அரசுகள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் இதில் மத்திய அரசின் SECI நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்படாமல் கடந்து செல்வது பல கேள்விகளை எழுப்பாமல் இல்லை.
அதானி வழக்கில் அமெரிக்காவின் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்ற தகவல்களின் அடிப்படையிலானவை:

- மத்திய அரசின் SECI நிறுவனமானது 2020-ம் ஆண்டு 12 ஜிகாவாட் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கான ஒப்பந்தங்களை அதானி குழுமம் மற்றும் Azure Power நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டது.
- ஆனால் மத்திய அரசின் SECI நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு மாநில அரசும் சூரிய ஒளி மின்சாரத்தை வாங்க ஒப்பந்தங்களை செய்து கொள்ளவே இல்லை. இதற்கு காரணம் அதிகமான விலையை நிர்ணயித்திருந்ததுதான்.
- இதனையடுத்து மாநில அரசுகளின் மின்சார வாரியத்தை, SECI நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து வைக்க அதானி நேரடியாக களமிறங்குகிறார்.
- 2021-ம் ஆண்டு ஆந்திரா முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியை நேரடியாக கவுதம் அதானி சந்தித்துப் பேசினார்.
- இப்படித்தான் அதானி நேரடியாக களமிறங்கி மாநிலங்களின் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு ரூ2,100 கோடி லஞ்சம் கொடுத்தார்.
- இதனையடுத்து 2021-2023-ம் ஆண்டு காலத்தில் ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷா, ஜம்மு காஷ்மீர் மாநில அரசுகள், SECI நிறுவனத்துடன் சூரிய ஒளி மின்சாரத்தைப் பெற ஒப்பந்தங்களும் செய்துவிட்டன.
- அதானி லஞ்சம் கொடுத்த ரூ2,100- கோடியில் ஆந்திராவை சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு மட்டும் ரூ1750 கோடி லஞ்சம் தரப்பட்டுள்ளது.
இப்போது மத்திய அரசு நிறுவனமான SECI-க்கு மின்சாரத்தை வாங்கக் கூடிய வாடிக்கையாளர்களான மாநில அரசுகள் கிடைத்துவிட்டன. இதனையே காட்டி அமெரிக்கா முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ21,000 கோடி முதலீடு பெற்றார் அதானி. ஆனால் லஞ்சம் கொடுத்துதான் மாநில அரசுகளை SECI-க்கு ஒப்பந்தம் போட வைத்ததை மறைத்துவிட்டார் அதானி என்பதுதான் அமெரிக்காவின் குற்றச்சாட்டு. இதில்தான் அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் முதன்மையான குற்றச்சாட்டுக்குள்ளாகி இருப்பது மத்திய அரசின் SECI நிறுவனமும் அதானி குழுமத்தின் அதானியும். மத்திய அரசு நிறுவனம் வாடிக்கையாளர்களே இல்லாத நிலையில் அதாவது தேவை எதுவுமே இல்லாத நிலையில் என்ன காரணத்துக்காக அதானி குழுமத்துக்கு 12 ஜிகாவாட் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கான ஒப்பந்தம் தந்தது? என்பது குறித்து யாரும் ஏன் கேள்வி எழுப்பவில்லையே என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications