சீன செல்போன்கள்.. இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய உளவுத்துறை முக்கியமான எச்சரிக்கை
இந்திய ராணுவத்தினர் மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் சீன செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
டெல்லி: சீனாவுடன் எல்லையில் உள்ள லைன் ஆப் கன்ட்ரோல் பகுதிகளில் அடிக்கடி மோதல் நடந்து வரும் நிலையில், இந்திய ராணுவ வீரர்களுக்கு, மத்திய உளவுத்துறை மிகவும் முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவத்தினர் மற்றும் இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் சீன செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாகவே எல்லை பிரச்சனை விவகாரத்தில் சுமூகமான உறவு இல்லை. இருந்த போதிலும் பாகிஸ்தான் எல்லைகளில் உள்ளது போல் மோதல் எதுவும் இல்லாமல் இருந்து வந்தது.
ஆனால் 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி, இந்திய எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் ஆயுதங்களுடன் வந்து இந்திய வீரர்களைத் தாக்கியதால், இரு நாட்டு படை வீரர்களுக்கும் கடும் சண்டை ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் பலியாகினர். சீன தரப்பிலும் வீரர்கள் பலர் பலியாகினர்.

சீனா ஆப்கள்
இந்த மோதலுக்கு பின்னர் இந்திய சீன எல்லையில் அடிக்கடி பதற்றம் ஏற்பட்டது. இந்திய சீன எல்லை முழுவதுமே இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் பாதுகாப்பு கருதி சீனாவின் மொபைல் செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து அப்போது மத்திய அரசு உத்தரவிட்டது. டிக்டாக், வி சாட் உள்பட பல செயலிகளுக்கு அப்போது தடை விதிக்கப்பட்டது. மேலும், சீனாவுடன் தொடர்புடைய பிற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் ஆப்களுக்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

பாதுகாப்புத்துறை
இந்திய ராணுவ வீரர்கள் சீன மொபைல் போன்களை பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புலனாய்வு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன. மத்திய உளவுத்துறை அமைப்புகளால் வெளியிடப்பட்ட ஆலோசனையில், " பல்வேறு வகையான சீன மொபைல் போன் சாதனங்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உங்கள் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ
இந்திய ராணுவத்தினரும், அவர்களின் குடும்பத்தினரும் சீனா செல்போன்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று உளவு அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்தியாவில் தற்போது ஜியோமி, விவோ, ஒப்போ, ஒன் பிளஸ், ஹானர், ரியல்மி, ஜியோனி, இன்ஃபினிக்ஸ், இஸட்.டி.இ உள்பட சீனா நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட செல்போன்களையே பலர் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில்தான், சீனத் தயாரிப்பு செல்போன்களை ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளன புலனாய்வு அமைப்புகள்.

மத்திய அரசு
ஏனெனில் சீனத் தயாரிப்பு செல்போன்களில் உளவு மென்பொருள் வைக்கப்பட்டிருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் சந்தேகம் தெரிவித்துள்ளன. இதன் காரணமாகவே கடந்த சில வருடம் முன்பு சந்தேகத்துக்குரிய செயலிகளை சீன செல்போன்களில் இருந்து மத்திய அரசு நீக்கியது. அதேநேரம் சீனா செல்போன்களையும் சீனா செயலிகளையும் பயன்படுத்துவதை ராணுவ அமைப்பினர் நிறுத்திவிட்டனர். இந்நிலையில் ராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்களும் சீனா செல்போன்களைப் பயன்படுத்த வேண்டாம் என உளவுத்துறை தற்போது எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications