தடுப்பூசி எடுத்துக்கொள்ள போகிறீர்களா? 56 நாட்களுக்கு ரத்த தானம் கூடாது.. ஏன் தெரியுமா? இதை படியுங்க
டெல்லி: கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்ட பின்னர் சுமார் 56 நாட்களுக்கு ஒருவர் ரத்த தானம் செய்ய முடியாது என்பதால், தடுப்பூசி போடுவதற்கு முன்னரே விரும்புபவர்கள் ரத்த தானம் செய்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் தற்போது கொரோனா வைரசின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது 32 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் டெல்லி பெங்களூரு போன்ற நகரங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

18+ அனைவருக்கும் தடுப்பூசி
வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இன்று முதல் 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தடுப்பூசிக்குப் பற்றாக்குறை நிலவுவதால், 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று தொடங்க வாய்ப்பில்லை என மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

56 நாட்களுக்கு ரத்த தானம் கூடாது
இருப்பினும், இன்னும் சில தினங்களில் 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு ஒருவரால் அடுத்த 56 நாட்களுக்கு, அதாவது 2ஆவது டோஸ் எடுத்துக் கொண்டு 28 நாட்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாது. இந்தியாவில் ரத்த தானம் செய்பவர்களில் 18-44 வயதுடையவர்களே அதிகம். இதனால் ரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் இப்போதே செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரணம் என்ன
இது கொரோனா தடுப்பூசி மட்டும் அல்ல, அனைத்து தடுப்பூசிகளுக்கும் பொருந்தும். தடுப்பூசிகளில் பொதுவாக உயிரிழந்த அல்லது பலவீனப்படுத்தப்பட்ட வைரஸ் இருக்கும். ஒருவர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின் சில வாரங்கள் வரை அவரது ரத்தத்தில் வைரஸ்கள் இருக்கும் என்பதாலேயே ரத்த தானம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

ரத்தத்திற்குப் பற்றாக்குறை
விபத்தில் காயமடைபவர்கள், அறுவை சிகிச்சைகளின்போது ரத்தத்தை இழப்பவர்கள் ஆகியோருக்கு மற்றவர்களிடம் இருந்து பெறும் ரத்தமே அளிக்கப்படும். தடுப்பூசி காரணமாக ஒருவரால் குறைந்தது 56 நாட்கள் வரை ரத்த தானம் செய்ய முடியாது என்பதால், எங்கு ரத்தத்திற்குப் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

அச்சம் வேண்டாம்
இருப்பினும், தற்போது வரை இந்தியாவில் ரத்ததிற்குப் பற்றாக்குறை இல்லை என்றும் அடுத்த சில மாதங்களுக்குத் தேவையான அளவு ரத்தம் சேமிப்பில் உள்ளதால் அச்சம் தேவையில்லை என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 18+ அனைவருக்கும் ஒரே நேரத்தில் தடுப்பூசி செலுத்த மாட்டார்கள், படிப்படியாகவே செலுத்தப்படும் என்பதால் பற்றாக்குறை எதுவும் ஏற்படாது என்றும் அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications